ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே. 

English Meaning:
Who Are the Siva-Siddhas
Space intermingling with space,
Nectar drowning in nectar,
Light dissolving in light
The elect are they, the Siva-Siddhas,
Who attain this glorious state.
Tamil Meaning:
குருவருள் பெற்ற பின்னர் உயிரினது வியாபகம் சிவனது வியாபகத்துள் அடங்கி நிற்கும் முறைமையையும், உயிர் அவனிடத்துச் செய்யும் அன்பாகிய நெகிழ்ச்சி அவனது பேரருளாகிய நெகிழ்ச்சியினுள் அடங்கிநிற்கும் முறைமையையும், உயிரினது அறி வாகிய சிற்றொளி, சிவனது அறிவாகிய பேரொளியில் அடங்கி நிற்கும் முறைமையையும் அநுபவமாக உணர்கின்றவரே சிவனைப் பெற்றவராவர்.
Special Remark:
`அடயோகம் முதலியவற்றால் அணிமாதி ஆற் றல்கள் சித்திக்கப் பெற்றோர் `சித்தர்` எனப்படினும், அவர் சிவஞானம் பெற்று பிறவியை அறுத்துக்கொள்ளாமையின் அவசித்தரே` என்றற்கு, குருவருளால் சிவஞானம் பெற்றுச் சிவப்பேறு சித்திக்கப் பெற்றோரை, ``சிவசித்தர்`` என்றார். நாயனாரும் அத்தகைய சிவசித்தரேயாதல் அறிந்துகொள்க. இதனால், சிவபோக அநுபவத்தில் ஆன்மா வானது தன்னை இழந்து சிவமாய் நிற்கும் அநுபவம் கூறப்பட்டது.