ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. 

English Meaning:
He Roasted the Seeds of Recurring Births
Like unto the swan that from cow`s milk the water parts,
So the Lord, Himself, alone, in this Sabha unique,
Grasped the senses many that scorch like fire,
And thus the Seven Births unto roasted seeds rendered.
Tamil Meaning:
தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளைக் குருபரனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் எரி சேர்ந்த வித்துப்போலக் கெட்டொழியும்.
Special Remark:
``ஆமேவு பால்நீர்`` என்றதனை, `ஆவின் பால்மேவு நீர்` எனப் பொருட்கேற்ப மாற்றிக்கொள்க. `தாம் மேவு, தீமை` என் பன, கடைக்குறைந்து நின்றன. தாம் மேவு நித்தம் - சத்திநிபாதர் சென்று காண்கின்ற நடனம். நித்தம் - நிருத்தம். குருவடிவமும் சிவ பெருமான் கொள்கின்ற சகளத்திருமேனிகளுள் ஒன்றாதல் பற்றி அதற்கு ஈடாக ஆடும் கோலத்தைக் குறித்தார். சத்திநிபாதர்க்கு அக் கோலமும் அப்பயனைத்தருதல் நோக்கி. ஆடும் கோலமும் சத்தி நிபாதர்க்குப் பாசத்தை அறுத்துப் பேரின்பத்தைத் தருதலை,
மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி, அருள் தான்எடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தானெந்தை யார்பரதந் தான். -உண்மை விளக்கம். 36
என்பதனால் அறியலாம்.
``உற்றன`` என்றது வினையாலணையும் பெயராய் வினை களைக் குறித்து நின்றது. அதன்பின் `பிரிக்கும்; அதனால்` என்னும் சொல்லெச்சங்கள் வருவித்து, `அன்னம்போல் நித்தம் கரணங்களுள் உற்றன பிரிக்கும், அதனால், பிறப்பு எரிசேர்ந்த வித்தாம்` என முடிக்க. `பிரிக்கும்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. தாம் ஏழ் பிறப்பு - தாமாகிய எழு பிறப்பு. இங்கு, ``தாம்`` என்றது ``உற்றன`` என முன்னர்க் கூறிய வினைகளை. `அவையே பிறவிக்கு வித்து` என்பார், ``தாம் ஏழ் பிறப்பு`` என்றார். பிறப்பிற்குக் காரணத்தை, `பிறப்பு` என்றது பான்மை வழக்கு.
`நுகர்வினை, கிடைவினை, வருவினை` என வினை மூன்றாகி நிற்கும். நுகர்வினை, இப்பிறப்பில் இன்பமாகவும், துன்பமாகவும் அனுப விக்கப்படுவன. இவற்றை, `பிராரத்தம்` என்பர். கிடைவினை, இனி வரக்கடவனவாகிய எண்ணற்ற பிறவிகட்கு ஏதுவாய்த் திரண்டு கிடப் பவை; இவற்றை, `சஞ்சிதம்` என்பர். வருவினை, நுகர்வினையை அநுபவிக்கும்பொழுதே செய்யப்பட்டு வருவன. இவற்றை, `ஆகா மியம்` என்பர். இவற்றுள் கிடைவினையே எண்ணற்ற பிறவிகட்கு ஏதுவாய் நிற்றலால், குருவருள் அதனையே எரி சேர்ந்த வித்துப்போல அழிக்கும். அதனால் பிறவி அறும்; பிறவியற்ற நிலையே வீடு. எனவே, குருவருளால், பாசநீக்கமும், வீடுபேறும் உளவாதல் அறிக.
இதனால், குருபரன் அருள்செய்யுமாறும், அவ்வருளால் எய்தும் பயன்களும் கூறப்பட்டன. குருவருளால் கிடைவினை எரிசேர்ந்த வித்தாய்விடுதலை, ``எல்லைஇல் பிறவி நல்கும் இருவினை எரிசேர் வித்தின் ஒல்லையின் அகலும்`` எனச் சிவப்பிரகாச (பா.89) நூலும் கூறுதல் காண்க.