ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே. 

English Meaning:
He Shattered Impurities Three—Egoity, Illusion and Karma
Like the rising spark that within the bamboo indwells,
So Lord Nandi abides in this body-temple
With sweet compassion gentler than a mother`s,
He shattered the Impurities Three,
And like unto the sun on the ocean of mercy arose.
Tamil Meaning:
கால வழிப்பட்டு, `குழவி, இளமை, முதுமை` என்னும் மாற்றங்களை உடையதாய் நிலையற்றதான இவ்வுடம்பு என்கின்ற கோயிலிலே நீங்காது குடிகொண்டு மறைந்திருக்கின்ற தலை வனாகிய சிவன், மூங்கிலில் மறைந்து நின்ற தீ, தான் வெளிப்படுங் காலத்து வெளிப்பட்டு விளங்குதல்போல, ஆன்மாவின் பக்குவ காலத்தில் மும்மல இருளை நீக்கி எழுகின்ற சூரியனாய் வெளிப்பட்டு விளங்குவான். அப்பொழுது அவன் தாயன்பினும் மிக்க பேரருளாகிய வெள்ளமாயும் நின்று பேரின்பத்தைத் தருவான்.
Special Remark:
``எழும்`` என்றதை இரட்டுற மொழிந்து, முற்றாயும், எச்சமாயும் கொண்டு முறையே முன்னும், பின்னும் இயைக்க. இதனால், `ஆனந்தக் கண்காட்டிக் களிம்பறுத்தலையும், பளிங்கிற் பவளம் பதித்தலையும் சிவன் முன்னே செய்யாமைக்குக் காரணம் பக்குவம் இன்மை` என்பது கூறப்பட்டது. ``வேயின் எழுங்கனல் போலே`` என்றமையால், `பளிங்கிற் பவளம் பதித்தான்` என்ற உவமை பற்றிச் சிவம் புதிதாக வந்து ஆன்மாவின்கண் புகுவது போலும் என மயங்குதல் கூடாது; முன்பு விளங்காது யாண்டும் உடனாய் நின்ற அதுவே பின்பு விளங்கும் என்பதை உவமை காட்டி விளக்கிற்று இத்திருமந்திரம். உயிர் உடலின்கண் அதுவே தானாய் நிற்றல்பற்றியும், இதயத்தானத்திலும், புருவ நடுவிலும் வைத்துத் தியானித்தலை உடன்பட்டுக் கொள்ளுதல் பற்றியும், உயிரின்கண் நிற்கின்ற சிவனை, உடம்பினுள் நிற்பவனாகக் கூறினார்.
``நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே``(தி.6 ப.95 பா.4) என அப்பரும்,
``எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே``
-தி.8 திருவாசகம். கோயில்திரு. 10
என்று மாணிக்கவாசகரும் அருளிச்செய்தமையும் காண்க. ``இம்மெய்`` என்றது, `நிலையற்றதான உடம்பு` எனப் பொருள் தந்தது.