ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

அறிவைம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபரனாமே.

English Meaning:
Supreme Consciousness
Our intelligence entangled in the senses,
Finds itself in very deep waters,
But inside our consciousness is a deeper Consciousness,
Which the Supreme grace stimulates.
Tamil Meaning:
(பாசத்தில் அகப்பட்ட உயிரினது அறிவு தானே அதனின்றும் விடுபடமாட்டாதோ எனின், மாட்டாது. ஏன் எனின்,) ஆணவமாகிய இயற்கைப் பாசத்தின் வழிவந்து பற்றியுள்ள மாயையின் காரியமாகிய பொறி, புலன் முதலிய செயற்கைப் பாசத்தில் உயிரினது அறிவு கட்டுண்டு, நீரின் ஆழத்தில் அமிழ்ந்து கரை ஏற அறியாத நிலைமைபோல, அவற்றினின்றும் விடுபடும் நெறியை அறியாது இடர்ப்படும். ஆகவே, அதற்கு அந்நெறியை அறிவிப்போன் நீராழத்தினின்றும் எடுத்துக் கரையேற்ற வல்லவன் போல்பவனாய், ஆசிரியர்க்குள் மேலானவனாகிய ஞானாசிரியனே.
Special Remark:
நான்றது - கட்டுப்பட்டது. ``உற்ற நீராழம் போல`` என்றாராயினும், `நீராழத்தில் உற்றதுபோல` என்றல் கருத்தென்க. `உற்ற நீராழம்போல நெறியறியாது` எனமாற்றுக. ``அறியாது`` என்றது முற்று. இஃது எதிர்மறைத் தொழில் உவமம். `நெறியாவது இது` என்பது அறிவித்தற்கு, `அறிவு அறிவுள்ளே அழிந்ததுபோல` என்றார். `உயிரினது அறிவு சிவத்தினது அறிவினுள்ளே பொருந்தித் தான் என்ப தொரு முதல் இல்லாது அழிந்தொழிந்தது போலும்படி` என்பது அதன் பொருள். இதுவே, `சிவமாந்தன்மை` எனப்படுவது. இந் நிலையைப் பன்னாள் பாவனையால் உணர்ந்து நிற்பின், பின்பு உண்மையிலேயே அஃது உண்டாவதாகும். இதனையே உப நிடதங்கள் `சோகம் பாவனை` என்றும், சிவாகமங்கள் `சிவோகம் பாவனை` என்றும் கூறும். சோகம் - அவன் நான் (ஆனேன்). சிவோகம் - சிவன் நான் (ஆனேன்). ``சோகம் எனப் பாவிக்கத் தோன்றுவன் வேறின்றிப் - பண்டைமறை களும்அதுநான் ஆனேன் என்று பாவிக்கச் சொல் லுவதிப் பாவகத்தைக் காணே`` என்று சிவஞானசித்தி (சூ. 9.7) நூல் இதனை எடுத்தோதுதல் காண்க. `அகம்பிரம்மாஸ்மி, தத்துவமசி` முதலிய வேதாந்த மகாவாக்கிய உபதேசங்கள் சோகம் பாவனையையும், `சிவத்துவமசி` என்னும் சித்தாந்த மகாவாக்கிய உபதேசமும், பஞ்சாக்கர உபதேசமும் சிவோகம் பாவனையையும் அடைவிப்பனவாம். இவை யெல்லாம் ஞானாசிரியனாலன்றி அடையலாகாமை அறிக.
இதனால், ஞானாசிரியனாலன்றி ஞானத்தை உணர்தல் கூடாமை, உவமையால் உணர்த்தப்பட்டது.
ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கல்அனல்
பானு ஒழியப் படின்.
என்றார் திருவருட்பயன் (பா.50).