ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாரா தவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்களித் தானே. 

English Meaning:
Sivayoga is to Attain Self-Illumination
Sivayoga it is to know the Cit-Acit,
And for the Yoga-Penance qualify;
Self-light becoming Self,
To enter undeviating, His lordly domain;
He granted me this — Nandi of the Nine Yogas.
Tamil Meaning:
மேற்குறிக்கப்பட்ட சிவயோகமாவது, `சித்தாகிய (அறிவுடைப் பொருளாகிய) ஆன்மாவும், தானே அறியும் தன்மை இன்மையால் தானே அறிந்தும், அறிவித்தும் நிற்கின்ற சிவத்தை நோக்க அசித்தாம் (அறிவில்லாத பொருளேயாம்) என்றுணர்ந்து, ஏகமாந் தன்மையுள் மிகச்சென்று, சிவனது அருளொளியே தானாகப் பெற்று, பிற பொருள்களைச் சார்தலாகிய பயனில்லாத சேர்க்கையிற் செல்லாதபடி, மிகுகின்ற அன்பினால் விளைகின்ற சிவபோகத் தினைத் தருகின்ற புதியதோர் யோகம். அதனையே எங்களுக்கு நந்திதேவர் அளித்தருளினார்.
Special Remark:
சிவனை நோக்க உயிர் அசித்தாதலை, ``அவனுக்கு இவனும் அசித்தாமே``(சிவஞானசித்தி. சூ. 11- 11 1) என்பதனான் அறிக. `தவப்புக்கு` என இயையும். தவ, உரிச்சொல். `யோகம்` நான்கில் முன்னது ஒழிய ஏனை மூன்றும் `ஒன்றாதல்` என்னும் காரணக் குறியேயாய் நின்றது. உலகப் பொருள்களைச் சார்தலை, `அவயோகம்` என்றார், அது முன்னே பல காலும் பல துன்பங்கட்கு இடையே நுகர்ந்து நுகர்ந்து அலுத்து விட்ட சிற்றின்பத்தையே மீளத் தருதலின். ``சிவயோக மேயோகம்; அல்லாத யோகம் - அவயோகம் என்றே அறி`` என்றது திருக்களிற்றுப்படி (பா.74) யும். அச்சிற்றின்பம் போல் துன்பத்தொடு விரவுதலும், வரையறைப்பட்டுக் கழிதலும் இன்றி எல்லையில்லாது புதிதுபுதிதாய்த் தோன்றி என்றும் இன்புறுத்துகின்ற சிவபோகம் முன்பு ஒருகாலும் கண்டறியாத தாகலின், அப்பயனை விளைவிக்கின்ற சிவயோகத்தை, `நவயோகம்` என்றார். ``சாராத அன்பு`` என்றதற்குச், `சாராமைக்கு ஏதுவாகிய அன்பு` என உரைக்க. அதிபோகம் - ஒப்புயர்வற்ற பேரின்ப நிலை. இதனால், `மேற்குறித்த சிவயோகமாவது இது` என்பதும், `அஃது இன்ன பயனைத் தரும்` என்பதும் கூறப்பட்டன. சிவயோகம் துரிய நிலை யாதலின், அதனால் விளையும் சிவபோகம் துரியாதீத நிலை என்க.