ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 

English Meaning:
DIVINE INSTRUCTION
He Descended From Heaven and Filled Me With Grace
He came down from Heaven, clothed in body,
Karma to match, stretched forth His cool Feet of
Grace, form time immemorial
And lo! inside me He stood, melting my yielding heart;
And filled my eyes with peerless bliss, past all compare,
All impurity dispelled.
Tamil Meaning:
மேல், ``அண்ட முதலான்`` எனக் குறிக்கப்பட்ட, அனைத்துலகிற்கும் முதல்வனாகிய சிவபெருமான், முன்னாளில், மேல்நிலையினின்றும் இறங்கி, என் வினைக்கேற்ற வகைகளாகத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு, கீழ்நிலையில் நின்ற தனது சத்தியை எனக்குப் பெருங்காவலாக அமைத்து நடாத்தித் தனது ஒப்பற்ற தனிப் பேரின்பத்தைத் தரும் அருள் நோக்கத்தை இன்று எனக்கு அளித்து, என் உள்ளத்தில் நீங்காது நின்று, அதனை அன்பி னால் கசிந்து கசிந்து உருகப்பண்ணி, எனது மலம் முழுவதையும் பற்றற நீக்கினான்.
Special Remark:
`இழிந்து, கொண்டு நின்றதாள்` என்க. ``விண்`` என்றது மேல்நிலையை. அது, `பரநிலை` எனப்படுதலின், அந்நிலைக் கண் நிற்கும் அவனது சத்தி `பராசத்தி` எனப் பெயர்பெற்று நிற்கும். அந் நிலையினின்றும் இறங்குதலாவது, உலகை நோக்குதல். அது முன்னை நிலையிற் கீழ்ப்பட்டதாகலின், ``தண் நின்ற`` என்றார். தண்மை - தாழ்வு, ``தண்பதத்தாற் றானே கெடும்`` (குறள். 548) என்பதிற்போல `மெய்யை வினைக்கீடாய்க் கொண்டு` என்க. மெய் - உண்மை நிலை. அஃது அறக்கருணையாய் நின்று விளக்குதலைச் செய்தல். அதனை மாற்றிக் கொள்ளுதலாவது, மறக் கருணையாய் நின்று மறைத்தலைச் செய்தல். சத்தியை, `தாள் - திருவடி` என்றல் மரபு.
உலகை நோக்காது இயற்கையில் நிற்கும் பராசத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி சத்தி` என நின்று உலகைத் தொழிற்படுத்தும். அந் நிலையில் அஃது உயிர்கட்குச் சிவத்தைக் காட்டாது உலகத்தையே காட்டி நிற்குமாதலின், `திரோதாயி அல்லது திரோதான சத்தி` என்று சொல்லப் படும். `மறைக்கும் ஆற்றல்` என்பது இதன் பொருள். இறைவனது சத்தி இவ்வாறு செய்தல், உயிர்களை அனாதியே பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தியை மெலிவித்தற் பொருட்டாம். அது மெலிவுறுதலே `மல பரிபாகம்` எனப்படும். மல பரிபாகம் வந்தவுடன் அத்திரோதான சத்தி தானே அருட்சத்தியாய் மாறிப் பதிந்து, உயிரின் அறிவில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கும். இவ் வுணர்ச்சி, உயிருக்கு ஓர் அதிர்ச்சியாய்த் தோன்றும். அதுபற்றி அருட்சத்தி பதிதலை, `சத்தி நிபாதம்` என்பர். நிபாதம் - வீழ்ச்சி.
மலபரிபாகத்திற்கு முந்தின நிலை பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் நிலையாகலின் அது, `பெத்தம், பெந்தம், பந்தம், கட்டு` என் றெல்லாம் சொல்லப்படும். மல பரிபாகத்திற்குப் பிந்தின நிலை பாசத் தினின்றும் விடுபட்ட நிலையாகலின் அது, `முத்தி, மோட்சம், வீடு` என்றெல்லாம் சொல்லப்படும். பெத்த நிலையையே `முன்` என்றும், முத்தி நிலையையே `இன்று` என்றும் அருளிச்செய்தார். பெத்தநிலை திரோதான சத்திவழிப்பட்டே நிற்றலின் அதனை, ``தலைக்காவல்`` என்றார். ``முன்`` என்றதனை முதலில் வைத்து, ``வைத்து`` என்றதன் பின், ``நடாத்தி`` என்பது வருவித்து, `இன்று, காட்டி உருக்கி அறுத் தான்` என முடிக்க. அதிகாரம் வேறாயவழியும் முன்னைத் திருமந்திரத் தோடு தொடர்பு தோன்ற எழுவாயை அதனினின்றும் தோன்ற வைத்தார். களிம்பு உவமையாகுபெயர். இதனால், `ஆணவ மலம் செம்பிற் களிம்புபோல அனாதியே உயிரில் கலந்துள்ளது` என்பதும், அங்ஙனம் கலந்த கலப்பால், `உயிர் அனாதிபெத்த சித்துரு` என்பதும், `அதனை அறுத்தான்` என்றதனால், `சிவன் இயல்பாகவே மலம் இல்லாத அனாதிமுத்த சித்துரு` என்பதும், அவனது அருள் செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாக்குகின்ற இரசகுளிகை போல்வது என்பதும் பெறப்பட்டன. ஆனந்தக் கண் - ஆனந்தத்தைப் பயக்கும் கண்; அஃது அருட்கண். அதனை உணரச் செய்தலே வழங்கு தலாகலின், ``காட்டி`` என்றார். `முன், வைத்து நடாத்தி, இன்று, காட்டி, உருக்கி அறுத்தான்` என்றதனால், இது நாயனாரது அநுபவமேயாதல் பெறப்பட்டது.
``எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்``
என்றார் திருவாசகத்தும் (தி.8 சிவபுராணம். 31. 32). ``ஆய்`` என்றது, `ஆக` என்பதன் திரிபு.
இதனால், `உலகை நோக்காது நிற்கும் நிலையே இறைவற்கு உண்மை நிலை` என்பதும், உலகை நோக்கி நின்று செயல் புரியும் நிலை பொதுநிலை என்பதும், `பொதுநிலையில் நிற்பனவெல்லாம் மறைப்பு நிலையே` என்பதும், `அந்நிலை பலவற்றையும் அவனது சத்தி திரோதான சத்தியாய் நின்றே செய்யும்` என்பதும், `அச்செயல் களெல்லாம் செம்பில் உள்ள களிம்பைத் தேய்ப்பது போல உயிர் களைப் பற்றியுள்ள ஆணவ மலத்தைத் தேய்க்கும் செயல்களேயாகும்` என்பதும், `அம்மலம் தேய்வுற்றபொழுது அத்திரோதான சத்திதானே அருட்சத்தியாய் மாறி உயிரைப் பொதுநிலையினின்று நீக்கி, உண்மை நிலையை அடையச்செய்யும்` என்பதும், `இவையே இறைவன் என்றும் உயிர்கள்பொருட்டு இடையறாது செய்துவரும் செயல்` என்பதும் கூறப்பட்டன. படவே, `இறை, உயிர், தளை` என்னும் முப் பொருள்களின் இயல்பு பற்றிய ஆகமப்பொருள் பலவும் இவ்வொரு திருமந்திரத்தானே தொகுத்துக் கூறப்பட்டவாறு அறிந்துகொள்க.