ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. 

English Meaning:
He Planted His Feet on My Heart
All impurity He shattered—our Nandi, Forehead-eyed,
Shattered to pieces by His opening Eye of Grace,
His Eye; at whose radiant light impurity quails;
So transfixed He Coral Feet on heart of mine, Crystal turned.
Tamil Meaning:
என் மலத்தைப் பற்றற நீக்கியவனாகிய எங்கள் சிவபெருமான் நந்தி தேவரே. அவர் மேற்கூறியவாறு அருட்கண்ணை எனக்குத் திறப்பித்து ஆணவ மலமாகிய களிம்பை அறுத்து, அக் களிம்பு அணுக ஒண்ணாத சிவமாகிய மாற்றொளி மிக்க பொன்னை உணர்வித்து, பளிங்கினிடத்துப் பவளத்தைப் பதித்தாற் போல்வதொரு செயலைச் செய்தார். அவர் பதிப்பொருளேயன்றி வேறல்லர்.
Special Remark:
பளிங்கு ஆன்மாவிற்கும், பவளம் சிவத்திற்கும் உள்ளுறை உவமமாய் நின்றன. எனவே, ``பளிங்கிற் பவளம் பதித் தான்`` என்றது, `ஆன்மாவாகிய என்னிடத்துச் சிவத்தை விளங்குவித் தான்` என்றதாயிற்று. பளிங்கு நீலமணியோடு சேர்ந்தவழி நீல மாயும், செம்மணியோடு சேர்ந்தவழிச் செம்மையாயும் சார்ந்ததன் வண்ண மாம் தன்மையுடையதாகலின், அவ்வுவமையால், `ஆன்மாவும் பாசத்தொடு சேர்ந்தவழிப் பாசமாயும் சிவத்தொடு சேர்ந்தவழிச் சிவமாயும் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது` என்பதும், `அத் தன்மைத்தாய ஆன்மா அனாதியே பாசத்தோடு சேர்ந்து நின்று பாச மாய்ப் பசுத்தன்மை எய்தி, அப்பாசம் நீங்கியவழிச் சிவத்தொடு சேர்ந்து பசுத்துவம் நீங்கிச் சிவமாம் தன்மையைப் பெற்று நிற்கும்` என்பதும், ``நந்தி பதித்தான்`` என்றதனால், `ஆன்மாவிற்குப் பாசத்தைப் பற்றறச் செய்து சிவமாந் தன்மையை எய்துவிப்பவன் ஆசான் மூர்த்தியே` என்பதும் உணர்த்தப்பட்டனவாம். இதனானே, `எம் போலியர்க்கு (சகல வருக்கத்தினருக்குச்) சிவபெருமான் ஆசான் மூர்த்தி வாயிலாகவே ஞானத்தை உணர்த்துவன்` என்பதும் கூறிய வாறு காண்க.
சிவம் செம்பொருளாகலின் பவளம் அதற்கு உவமை யாயிற்று.