ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 

English Meaning:
Nature of Divine Tranquillity
In space pure is tranquillity seated
In space pure It does repose,
Tranquillity begins where Vedas end;
There in self-realization they quietly abide.
Tamil Meaning:
செயலறுதியில் நிற்கும் சிவசித்தர்கள் இருப்பதும் கிடப்பதும் மாசொடு படாததாய பரவெளியிலேயாம். ஆகவே, அவர்தம் உணர்வு நிற்கும் இடம், வேதம் எட்டமாட்டாது நின்றுவிட்ட இடமாம். அதனால், அவர்களும் அவ்வேதத்தை நோக்குதற்கண் மறதியே பெற்றார்.
Special Remark:
உலகத்தார் அறியும் பொருள்களில் `வெளி` எனப்படும் வானமே எல்லை இல்லாததாக அறியப்படுவது. அதனால், உண்மையில் எல்லை இல்லாத சிவ பரம்பொருளை, `வெளி` என்று உருவகித்து நூல்கள் கூறும். அவ்வாறாயினும், `உலக வெளியின் வேறாய் மேம்பட்டது` என்பது உணர்த்துதற் பொருட்டு, வாளா, `வெளி` என்னாது, `பரவெளி` என்று கூறும். இன்னும் அப் பரம் பொருள், ஞானமே வடிவாய் நிற்றலின், `சிதாகாசம், சிற்பர வியோமம்` என்றெல்லாம் சொல்லப்படும். சிவ பரம்பொருளை, `சிவம், சத்தி` என வேற்றுமை கருதாதவிடத்து சிவமே பரவெளியாம். அவ்வாறு வேற்றுமை கருதுமிடத்து, சத்தி பரவெளியாக, சிவம் அதனைத் திருமேனியாகவாயினும், இடமாகவாயினும் பெற்று நிற்கும் பொருளாகச் சொல்லப்படும்.
``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி`` (தி.6 ப.57 பா.3) என்றாற் போல்வன வேற்றுமை கருதிக் கூறிய திருமொழிகளாம். இங்கு வேற்றுமை கருதாது கூறியது என்க.
``இருப்பது`` என்றது தம்மை இழவாது நின்ற துரிய நிலை யையும், ``கிடப்பது`` என்றது, தம்மை இழந்து நின்ற அதீத நிலை யையுமாம். இவ்விடம், நாதமாகிய சொல்லைக் கடந்து நின்ற தாகலின், ``சுருதி முடிந்திடம்`` என்றார். `முடிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. ``முடிந்த`` என்றது, `இளைத்து நின்ற` என்னும் பொருளது.
`` ... ... ... நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய்; இதுஉன் தன்மை`` -தி.9 ப.5 பா.4
எனத் திருமுறையுள்ளும்,
``சொல்லும் இடமன்று; சொல்லப் புகும்இடம்
எல்லை சிவனுக்கென் றுந்தீபற
என்றால்நாம் என்செய்கோம் உந்தீபற``
-திருவுந்தியார் 29
எனச் சாத்திரத்துள்ளும் கூறப்பட்டமை காண்க.
இத்தகையோர்க்குச் சொல்வடிவாய வேதம் முதலிய நூல்களான் ஆகக்கடவது இன்மையின், `சுருதிக்கண் தூக்கமே கண்டார்` என்றார். தூக்கம் - மறதி; என்றது விரும்பாமையை.
``கற்றாரை யான்வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்``
(தி.8 திருவாசகம், திருப்புலம்பல் -3) என்றதூஉம் இந்நிலையில் நின்றமையாலாம். இதனால், அதீத நிலையினது இயல்பு கூறப்பட்டது.