ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே. 

English Meaning:
Sivayogins Attain Turiya State in Mortal Body
Sivayogins are they that the seed destroy,
Who, in waking state, the pure awareness induce;
Who in harmony unbroken, achieve the tranced breath,
When life, senses, body — alike simulate death.
Tamil Meaning:
குருவருளால் சிவயோகம் கைவரப் பெற் றவர்கள், பிறவிக்கு வித்தாகிய கிடைவினையை (சஞ்சித கருமத்தை) முற் கூறியபடி அழித்து, குரு அருளிச்செய்த உபதேச மொழியிலே உறைத்து நின்று, சுத்த துரிய நிலை மிகவும் தோன்றப் பெற்று, ஐம் புலன்களை நுகர்கின்ற உணர்வு அவற்றால் கட்டுண்ணாமலே அவற் றோடு பொருந்தி நிற்கச் சிவத்தோடு ஒன்றாய் உடம்பு உள்ளபொழுதே செத்தார்போல உலகத்தை நோக்காது புருவ நடுவிலே நிற்பார்கள்.
Special Remark:
வியாக்கிரம் - முடிவிடம்; ஆறாவது ஆதாரம். உணர்வை, ``உயிர்`` என்றார். `சிவத்தோடு` என்பது ஆற்றலால் வந்தது. மேற்குறித்த சிவோகம் பாவனையின் முதிர்ச்சியே `சிவ யோகம்` எனப்படுவது. இது ஞானத்தில் யோகம். இது கைவரப்பெற்ற நிலையே சுத்த துரியம். இயமம் முதலிய எட்டுறுப்புக்களை உடைய யோகம் தவயோகம் என்க. சிவயோகத்தில் நிற்பவர்கள் காண்ப வற்றையெல்லாம் சிவமாகக் காண்பதன்றிப் பிறவாகக் கண்டு விருப்பு வெறுப்புக்கள் கொள்ளுதலும், இன்பும், துன்பும் உறுதலும் ஆகிய வேறுபாடுகளுள் யாதொன்றும் இல்லாதிருத்தலை, ``செத்திட் டிருப்பர்`` என்றார். இதனால், குருவருளைப் பெற்றாரது நிலைமை கூறப்பட்டது.