ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

விந்துவுள் நாதம் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.

English Meaning:
Sivoham when Bindu Subsides

In union of Bindu and Nada
Was born this creation vast;
It is beginning and end of all life,
Of great mantras too,
When Bindu subsides,
Then is Sivoham.
Tamil Meaning:
சுத்த மாயையினின்றும் தூலமாகவும், சூக்கும மாகவும் தோன்றுகின்ற வாக்குக்களால்தான் இங்குக் காணப்படுகின்ற பலவாகிய உயிர்களும் உளவாயின. அதனால், மந்திரங்களின் தோற்ற முடிவுகளே உயிர்களின் தோற்ற முடிவுகளாய் அமைகின்றன. ஆகவே அவ்வாக்குக்கள் பிராசாத யோகத்தால் தம் சத்திகள் அடங்கப் பெறுமாயின், சிவோகம் பாவனை உண்மையாய்ப் பயன் தரும்.
Special Remark:
பயன் வகையில் இவ்வுலகத்தார்க்குத் தூலம் சிறந்த தாகலின் அதனை முன்னர்க் கூறினார். உடலினிடத்து உயிர் உளதாதல் அதன் உணர்வு பற்றியே அறியப்படுதலாலும், அவ்வுணர்வு வாக்குகளாலன்றி நிகழாமையாலும் `அவற்றது தோற்றத்தினாலே உயிர்களின் தோற்றம் உளதாயிற்று` என்றார். தோற்றத்திற்கு உள்ளது முடிவிற்கும் ஒக்கும் ஆதலின் `மந்திரங்களின் தோற்றமும் முடிவுமே உயிர்களின் தோற்றமும், முடிவுமாம்` என்பது பெறப்படும். மந்திர மொழியால் உண்டாகும் உணர்வே இறையுணர்வு ஆதலின் அதனது தோற்ற முடிவுகளையே உணர்வினது தோற்றமுடிவுகளாகக் கூறியது பொருந்துவதாயிற்று. இவற்றால் வாக்குக்களின் நீங்குதலே பந்தத்தின் நீங்குதலாம் ஆதலின், `விந்து அடங்கச் சிவோகம் விளையும்` என்றார்.
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே`` l
என்னும் சிவஞான சித்தி இங்கு நினைக்கத்தக்கது. எனவே வாக்குச் சயமும் ஒரு வகை விந்து சயம் ஆயிற்று.
இதனால், சிறப்புடைய ஒரு விந்து சயம் கூறப்பட்டது.