ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணம் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்(து)
உண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.

English Meaning:
Burn Bindu in Fire of Kundalini

The fiery Bindu above is Lord`s Body (macrocosmic)
The Bindu wasted here below is vital Prana (microcosmic)
If mixing the two, they burn it in the Fire of Kundalini
Then they consume the very ambrosia
—This, the wisdom of Yogis true.
Tamil Meaning:
சிவோகம் பாவனையால் உயிர் சிவனாதலால், அது நின்ற உடம்பும் சிவனது உடம்பாகியபின், அவ்யோகியது விந்தும் நீர்த்தன்மை நீங்கிச் சிவனது விந்துபோல நெருப்புத் தன்மை எய்த அதனையும், உலகில் நாள்தோறும் வெளிவிடுத்துச் சிறிது சிறிதாக அழிக்கப்படுகின்ற பிராணவாயுவாகிய மூலப்பொருளையும் ஒற்றுமைப்பட ஒன்றாகக் கலந்து மூலாக்கினியால் சமைத்து உண்ணும் முறையை ஓர் யோகி வல்லனாயின், அவனுத விந்து தேவாமிர்தமாய் உடல் நலங்கள் பலவற்றைத் தருதலுடன், ஞானமும் நன்கு சிறந்து பிரகாசிக்கச் செய்யும்.
Special Remark:
அண்ணல் - தலைவன்; சிவபிரான். `ஆகிய பின்` என்பது ``ஆகி`` எனத் திரிந்து நின்றது. அனல் விந்து - அனல் தன்மைத் தாகிய விந்து. ``அவ்வனல் விந்து`` என்னும் சுட்டு, `அது சிவவிந்து வின் தன்மை` என்பதைச் சுட்டிற்று. ஒவ்வொரு மூச்சிலும் சிறிது சிறிது பிராண வாயு அழிந்தொழிதலை ``மாய்க்கும் பிராணன்`` - என்றார். ``பிராணனாம் விந்து`` என்பதில் ``விந்து`` என்பது `மூலப் பொருள்` எனப் பொருள் தந்தது. கட்புலனாகாது கருதியுணருமாறு அகத்தே நிற்றல் பற்றி மூலாக்கினியை, ``கண்ணும் கனல்`` என்றார். கண்ணல், கருதல். ``எரித்து`` என்றது, `அவ்வாற்றால் பாகம் (பக்குவம்) செய்து` என்றபடி. ``உண்ணில்`` என்பது அவ்வாறு செய்து உண்ணுதலின் அருமை தோற்றி நின்றது.
இதனால், உண்மை விந்து சயம் பெறுமாறும், அதனால், உயர் ஞானமாகிய பயன் விளைதலும் கூறப்பட்டன.