ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

வித்தக்குற் றுண்பான் விளைவறி யாதவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்தச்சுட் டுண்பவன்
வித்துக்குற் றுண்பானில் வேறலன் நீற்றவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்துவிற் றானன்றே.

English Meaning:
Yogi Sublimates Bindu
He who pounds seed and consumes it
Knows not good that of harvest comes;
Different is he,
Who fries it (in Kundalini Fire) and in body absorbs;
The latter, of the seed a meal does not make,
But the Seed of Birth he ends.
Tamil Meaning:
விதைக்கு வைத்திருக்கும் நெல்லைக்குற்றி உண வாக்கிக் கொள்பவன் வித்தினால் விளையக் கூடிய பெரும்பயனை இழந்தவனாவன். இனி, விதை நெல்லைக்குற்றி உண்ணாமல், பொரி யாக வறுத்து உண்பவனும் முன் சொல்லப்பட்டவனைவிட அறிவுடை யவன் ஆகமாட்டான். (ஏனெனில், அவனும் விளைவை இழக்கின்றா னன்றோ!) ஆகையால் சிவயோகி விதையைக் குற்றி, அல்லது வறுத்து உண்ணாமலும், பலரும் செய்கிறபடி நிலத்தில் விதைத்தலைச் செய்யா மலும் பொன்னுக்கு விற்பவனைப் போன்றவன் ஆவான்.
Special Remark:
நீற்றவன் - முழுநீறு பூசியவன். சிவயோகி இம்மந்திரம் ஒட்டணியாகச் செய்யப்பட்டமையால், இதன் பொருள் வருமாறு:-
`விந்துவை உபாதியாக்கிக் கொண்டு அதனை எவ்வாற்றா லேனும் போக்குபவன் அதனால் எந்தப் பயனையும் பெறாமல் இழப்பவனாவன். இனி யோகத்தால் விந்துவை உடம்பினுள் வற்றச் செய்பவனும் விந்துவால் பெறக்கூடிய பெரும்பயனைப் பெற்றவன் ஆகமாட்டான். ஆகையால் சிவயோகி இந்த இரண்டு வகையிலும் இல்லாமலும் பெரும்பாலோர்போல விந்துவை மாதர்பால் விடாமலும் விந்து சயத்தால் சிவோகம் பாவனையை அடைந்து நலம்பெறுவான்`
விதை நெல் மிக்க விலையுடையது. அதனைப் பொன்னுக்கு விற்றால், அந்த அளவு உணவு நெல்லை மலிவான விலைக்கு வாங்கி உண்ணவும் செய்யலாம்; பொன்னும் இலாபமாகும். அதனால், `அதனை ஒப்பது சிவயோகியின் செயல்` என்றார்.
இதனால், `விந்து சயத்தால் பெறத்தக்க சிறந்த பயன் சிவோகம் பாவனையே` என்பது கூறப்பட்டது.