ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
வித்தின்இல் வித்தை விதற உணர்வோர்க்கு
மத்தில் இருந்ததோர் மாங்கனி ஆமே.

English Meaning:
Know the Seed of Seed and Preserve Body

Except for those who plant the seed,
Harvest there be none in future;
Except for those who plant the seed,
Wisdom great there be none;
If they know the Seed of seed for certain
Preserved their body be
Unto the mango fruit kept in vessel suspended.
Tamil Meaning:
உலகில் விதையை நிலத்தில் விதைப்பவர்க் கல்லது விளைவு ஏதும் கிடைக்க மாட்டாது. விதையை நன்முறையில் விதைப்பவர்க்கல்லது சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும். (அதுபோல விந்துவாகிய வித்தினை நன்முறையில் இடாதார்கக்ம் நன்மகப் பேறாகிய விளைவும் கிடைக்கமாட்டாது; அவர்க்குச் சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும்.) விந்துவாகிய வித்தினது இல்லற வித்தையை அமைந்து நோக்கி உணர்வாராயின், மரத்தில் தூங்கும் மாங்கனி போலும் பயன் கிடைப்பதாகும்.
Special Remark:
முன்னிரண்டடிகள் ஒட்டணியாய் நின்றமையின் அவற்றிற்குரிய பொருள் வருவித்துரைக்கப்பட்டது. `மிக்க` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. மூன்றாம் அடியில் வந்த ``வித்தை`` என்பது `கல்வி` என்றவாறு. இல்லறத்தை ``இல்`` என்றார். விரைவினை உணர்த்தும் `விதுப்பு` என்பது முதனிலையளவாய், `விது` என நின்றது `வேதின வெரிநின் ஓதிமுது போத்து`` - என்பதில் `ஓந்தி` என்பது ``ஓதி`` என இடைக்குறைந்து நின்றது போல, `மரத்தின்` என்பது எதுகை நோக்கி, ``மத்தின்`` என இடைக் குறைந்து நின்றது. வாளா, `மாங்கனி ஆம்` எனின் குறித்த பொருள் விளங்கா தாகலின், ``மரத்திலிருந்தோர் மாங்கனி ஆம்`` என்றார். அதனால், வித்தினது விளைவே மாங்கனியாதல்போல், `விந்துவின் விளைவாக நன்மகவு உண்டாகும்` என்பது பெறப்பட்டது. இதுவும் ஒட்டணியே.
மாதொருத்தியை மணந்தவர்க்கு உளவாகிய இல்லறக் கடமைகளில் குடிவழியை நற்றவம் செய்தாயினும் நன்முறையில் தொடரச் செய்தலும் ஒன்றாகலின், `அது விந்து சயத்தால் கைகூடும்` என்றற்கு இவையெல்லாம் கூறினார்.
இதனால், விந்து சயத்தால் விளைவதோர் இம்மைப் பயன் கூறப்பட்டது.