ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

ஒழியாத விந்து உடல்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலம் சத்தி
ஒழியாத புத்திதபம் செபம் மோனம்
அழியாத சித்திஉண் டாம்விந்து வற்றிலே.

English Meaning:
Conserve Bindu and Attain Siddhis

If Bindu stands retained in body
Life ebbs not;
Great strength, energy, intelligence alert,
Tapas, contemplation and silence
And siddhis enduring,
—All these are attained,
—If Bindu be conserved true.
Tamil Meaning:
யோக முயற்சியால் விந்து வீழ்தலின் நீங்கி உடற் குள்ளே நிற்குமாயின் பிராணனும், உடலின் மிக்க வலிமையும், அறிவின் ஆற்றலும் அழியாது நிலைபெறும். இனி விந்து மூலாக் கினியால் தன் இயல்பு வேறுபட்டு உடம்பினுள் ஒன்றாய்க் கலந்து விடுமாயின் இடைவிடாத ஞானம், தவம், செபம், மௌன நிலை, எட்டுச் சித்திகள் ஆகிய எல்லாம் உளவாகும்.
Special Remark:
`அழியாது` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. `பிராணன் முதலியவை அழியாது நிற்கும்` என முடிக்க. உடல் வலியிழந்து மெலியுமாயின் அறிவும் சோர்ந்து, பிராணனும் வலிமை குன்றி நீங்கும். பிராணன் நீங்கவே உடல் சிறிதுபோதும் நிலைக்கமாட்டாது நீங்கியொழியும். எனவே விந்து சயத்தால் வாழ்நாள் நீட்டிப்பு உளதாதல் கூறப்பட்டதாம். வாழ்நாள் நீட்டித்தலால் உயிர் தான் எடுத்த உடம்பினால் ஆகிய பயனைப் பெறுதல் கூடும் என்பது பின்னிரண்டடிகளால் சொல்லப்பட்டது. ஒழியாத ஞானமாவது, அறியாமையால் தவிர்க்கப்படாத மெய்யுணர்வு. ``அழியாத சித்தி`` என்றது சித்தியின் பெருமை கூறியவாறு.
விந்துவின் வாளா வலிந்து நிறுத்தின் அஃது உபாதியாய், உடற்குத் தீங்கு தரும். யோக முயற்சியால் நிறுத்தின் அது, தன்னியல்பு வேறுபட்டு நிற்கும் ஆதலின் அதனால் உடல் வலிமை முதலிய நலன்கள் உண்டாகும். ஆகவே, யோக முயற்சியால் நிறுத்துதலே இங்குக் கூறப்பட்டது. இனி அவ்வாற்றானே அதனை மேலும் திரிவுபடச் செய்த வழி அஃது உடம்பினுட் சுவறியோக நெறிக்கு மேலும் உதவும் என்பது பிற்பகுதியாற் கூறப்பட்டது.
இவ்வாறு இதனால் உண்மையான விந்து சயத்தால் விளையும் பயன்கள் கூறப்பட்டன.