ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழுனைச் சொருகிச் சுடருற்று
முற்று மதியத் தமுதை முறைமுறைச்
செற்றுண் பவரே சிவயோகி யாரே.

English Meaning:
Conservation of Sex Energy Vital for Yoga Practice

Thus conserved, they light the Fire of Kundalini,
And forcing it upward through Nadi Sushumna
Reach the state of illumination
There they partake of the ambrosia
From the Moon within flows;
Those who do this in unbroken continuity,
Are verily Siva Yogins true.
Tamil Meaning:
விந்து வறளும்படி யோக முயற்சியால் மூல அனலை அதன்பால் சேர்த்து, அதனால் அது கீழ்நோக்கி வீழும் இயல்பை விட்டு மேல்நோக்கி ஏறும் இயல்பினதாகச் செய்து அவ்வாறு சுழுமுனை வழியாக மேல் ஏறி ஆஞ்ஞையை முட்டி அடையப் பண்ணி, அஃது அவ்விடத்துள்ள ஒளியோடு கலந்தபின்னர், மேலும் செல்கின்ற மூலக்கனலால் ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிறைமதி மண்டலத்திலிருந்து ஊறி வழிகின்ற அமுதத்தை முறை முறையாகத் தமது பண்டை இயல்பு கெட உண்கின்றவர்களே சிவயோகியர் ஆவார்கள்.
Special Remark:
`துற்ற அனலால் சுழியில் சொருகி` என்க. ``துற்ற சுழுமுனை`` என்பதில் சுழுனை ஆகுபெயராய் அதன் எல்லையைக் குறித்தது. விந்து ஆஞ்ஞை வரையிற் சென்று அங்குள்ள ஒளியோடு கலத்தலால் தானும் ஒளியாகி உடல் எங்கும் பரவும் என்க. உற்றபின், என்பது, ``உற்று`` எனத் திரிந்து நின்றது, பண்டையியல்பாவது, உலகருட் சிலராய் மனஞ்சென்றவாறே சென்று விந்துவை வீழ்ந்து அழிதல். மதிமண்டலத்து அமுது தச நாடிகளில் பாய்தலால் அதுவே உணவாயிட, வேறு உணவு வேண்டாமையை `உண்ணுதல்` என்றார். அது பலமுறையாக நிகழும் ஆதலின், `முறை முறை உண்டல்` என்றார்.
இதனால், உண்மை விந்து சயத்தின் மேல்நிலைப் பயனும், அதனை அடைவோரது சிறப்பும் கூறப்பட்டன.