ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

தானே உபதேசம் தானல்லா தொன்றில்லை
வானேய் உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

English Meaning:
Conquer Bindu and Attain Siva State

This the Mystic Secret
There is none — but this
He alone is; nothing else there is;
The Bindu heavenward ascends,
The Organs Fourteen
(Jnanendriyas five, karmendriyas five and Antakaranas four)
Their action cease;
Then does Jnana follow;
That verily is Siva State.
Tamil Meaning:
முன்மந்திரத்தில், `அகாரம் முதலிய மூன்றோடு உடன் வைத்துத் தியானிக்க` எனக் கூறிய கூற்றில் சுட்டப்பட்ட சிவத்தை உபதேசிக்கும் உபதேசமே உண்மை உபதேசமாகும். ஏனெனில், சிவம் இன்றி யாதொரு பொருளும் இல்லை. இனி ஆகாயம் போல் எப்பொருட்கும் வியாபகமாய் உள்ள சுத்தமாயை யினின்றும் பிரணவ வடிவாய்த் தோன்றுகின்ற வாக்குக்கள் பதினாறு கலைகளாக வைத்துத் தியானிக்கப்படும்பொழுது ஆதார யோகத்தில் ஏழாம் தானத்துடன் உலகியல் உணர்வோடு நிகழும் முதற் பதினான்கு கலைகள் ஆதார சத்திகளோடு அடங்கிவிடும். உலகியல் நீங்க சிவ உணர்வோடே நிகழும் எஞ்சிய ஏனை இருகலைகள் நிராதார யோகத்தில் நிராதார சத்திகளோடு அடங்கிவிடும். அந்நிலையே சிவத்துவ நிலையாம்.
Special Remark:
`பிராசாத யோகத்தால் விந்து சயம் பெறுவார்க்குச் சிவோகம் பாவனை கைவரும் வகையில் யோகம் சிவயோகமாய் நிகழும்` என மேல், `விந்துவும் நாதமும் மேவக்கனல்மூலம்`` என்னும் மந்திரத்திற் கூறியதை அஃது இவ்வாற்றால் நிகழும் என்பது இதனுட் கூறப்பட்டது. உபதேசப் பொருள், ``உபதேசம்`` எனப்பட்டது.
`பிரணவத்தைப் பதினாறு கலைகளாக வைத்துத் தியானிக்கு மிடத்து அவை எவ்வாறு அமையும்` என்பது மூன்றாம் தந்திரத்தில், ``கலைநிலை`` என்னும் அதிகாரத்தில் விரிவாக விளக்கப்பட்டது.
பூதாகாயம் ஏனை எல்லாப் பொருள்கட்கும் வியாபகமாய் நிற்றல் யாவராலும் அறியப்பட்டதாகலின் அதனைச் சுத்த மாயையின் வியாபகத்திற்கு உவமையாகக் கூறி விளக்கினார். ``வான் ஏய்`` என்பதில் `ஏய்` உவம உருபு. ``விந்துவின் வந்த`` என ஐந்தன் உருபு விரிக்க. புத்தி - ஞானம்; சிவஞானம். இந்த ஞானம் சிவத்தைத் தன்னின் வேறாக உணரும் ஞானம். இது, நீங்கினால் ஆன்மாச் சிவத்தைத் தன்னுள்ளே உணர்ந்து சிவமாம் ஆகலின் அதனை, ``சிவகதித் தன்மை`` என்றார்.
இதனால் விந்து சய உபாயங்களில் பிராசாத யோகம் சிறப்புடையதாதல் அது நிகழுமாறு கூறிய முகத்தால் விளக்கப்பட்டது.