ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

தாவித்த அப்பொருள் தான் அவன் எம்மிறை
பாவித் துலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந்
தாவிக்கு மப்பொரு ளானது தானே.

English Meaning:
She Created All Life

Eternal existent is our Lord;
When at the beginning the worlds were created,
She Our Para Sakti followed Him,
Through ``Heaven and earth``
And breathed life into creation all;
That verily was Sakti`s Work.
Tamil Meaning:
சத்தி மேற்கூறியவாறு மனம் புகுந்தபின் அவளால் அங்கு நிறுவப்பட்ட (நிலைப்பிக்கப்பட்ட) அப்பொருள் எம் இறைவனாகிய சிவனேயாகும். எதனால் எனின், அவன் உலகைப் படைக்க நினைக்கும்பொழுது சத்தியும் அதனையே விரும்பி, மாயையின், மேல் கீழ் ஆகிய இரு பகுதிகளையும் சார்ந்து நின்று பல்வேறு வகையாகப் புலனாகின்ற அப்பொருளாய் நிற்கின்ற அச்செயலையே தான் செய்வாள் ஆதலின்.
Special Remark:
``தாவித்த அப்பொருள்`` என்ற அனுவாதத்தால், தாவித்தலும் பெறப்பட்டது. படவே, சத்தி தான் மனம் புகுந்தபின் சிவனை அங்கு நிலைப்பிக்கச் செய்தலும் ஒருதலையாக நிகழ்தல் அறியப்படும். இதனை, சிவனே முதல்வனாக, சத்தி துணைவியாய் நிற்றலாகிய உண்மைபற்றித் தெளிந்து கொள்ளுதற்குப் பின்மூன்று அடிகளைக் கூறினார். `அவன்தான்` என மாற்றியுரைக்க. ``பாவித்துப் படைக்கின்ற காலத்து`` என்றாராயினும் `படைக்கப் பாவிக்கின்ற காலத்து` என்றலே கருத்தென்க. தொடர்தற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.` ஆவித்தல் - உயிர்த்தல் புலனாதல். `ஆனதே செய்தாள்` எனவும், `ஆதலின்` எனவும் சொல்லெச்சங்கள் வருவித்துக் கொள்க. `தானது தானே` என்பது பாடமன்று.
இதனால், பூரணசத்தி, பின் சிவத்தைத்தருதல் கூறப்பட்டது.