ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

ஆணைய மாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தனாதனன் தானே.

English Meaning:
When Egoity Disappears

Untroubled by Anava ways,
Inward looking,
Steadying the wavering mind,
Centering it on high,
Thus when they realize praiseworthy Para
They and He for ever one become.
Tamil Meaning:
திரோதான சத்தியின் வசமாய் வருந்தாது பற்றற்றுத் திருவருளில் இருப்பவர். அதன் மேலும், எப்பொழுதும் பெரிய ஐயத்தையே கொண்டு அலைவதாகிய மனத்தை அவ்வாறு அலையாமல் ஒருவழிப்படுத்தி எல்லாம் அற்ற இடத்தில் விளங்குவ தாகிய பரம் பொருளை உணர்வார்களாயின், அப்பொருளாகிய சிவன் அப்பொழுது தனது அருட்சத்தியாகிய இயற்கை ஆசனத்தில் விளங்கி நின்று அருள் புரிவான்.
Special Remark:
ஆணை, திரோதானசத்தி, `அகமாய்` என்பது இடைக் குறைந்து நின்றது. திரோதான சத்தியின் வசமாய் நிற்றலாவது வினைப் பயனை நுகர்வதிலும், ஈட்டுவதிலும் முனைந்து நிற்றல், அதனால் வருவது அல்லலே யாதலாலும், அதனின் நீங்கினார்க்கு அருளே தாரகம் ஆதலாலும் ``வருந்தாது உள் இருந்தார்`` என்றார். ``மாண் ஐயம்`` என்பதில் மாண்பு, பெரிது. ``பாழ் நயம், தாள் நயம்`` என்ப வற்றில், நயம் `நையம்` எனப் போலியாயிற்று. `பாணயம், தாணயம்` என்பனவும் பாடம். தத்துவம் அனைத்தும் கடந்த இடத்தை, ``பாழ்`` என்றார். அவ்விடத்துள்ள நயம், இன்பம். பின் வந்த நயம் விருப்பம் `தாள் ஆய நய ஆதனம்` என மாற்றிக் கொள்க.
இதனால், படைப்பு முதலியவற்றைச் செய்யும் திரோதான சத்தி செயற்கையேயாக, அருட்சத்தியே இயற்கையாதல் கூறப்பட்டது.