ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

முற்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே.

English Meaning:
Sakti Pervades All Adharas

The Spark that arose in triangular Chakra (Muladhara)
Flew and spread in the rest of Adhara Chakras;
And piercing Sahasrara shone bright;
Thus She pervaded in Chakras all.
Tamil Meaning:
முதல் ஆதாரமாகிய மூலத்தினின்றும் எழுகின்ற தீக் கொழுந்து ஏனை ஆதாரங்களிலும் சென்று பரவுதற்பொருட்டும், அங்ஙனம் பரவுதலின் பயனாகிய உள்ளொளியைத் தரிசித்தற் பொருட்டும் சத்தி அந்த ஆதராங்களாகிய சிறிய இடங்களில் அடங்கு பவள் அல்லளாய் இருந்தும் அவைகளில் எழுந்தருளியிருக்கின்றாள்.
Special Remark:
`அதற்குக் காரணம் கருணையே` என்பது கருத்து. முன்னது, ``சதுரம்`` எனக் கூறினமையால், ஏனைய ஆதாரங்களையும் பொதுப்பட, ``சதுரம்`` என்றார். மந்திரக் கட்டங்கள் சதுர வடிவாயினும், `சக்கரம்` என வழங்கப்படுதல் போல, `சக்கரம்` எனப்படுபவற்றை `சதுரம்` என்றார். `கடந்தும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. முதலடி இன எதுகை.
இதனால், `எங்கும் வியாபியாய் உள்ளவளைச் சக்கரங்கட் குள்ளே காணுதல் எவ்வாறு` என்னும் ஐயம் நீக்கப்பட்டது.