ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

போற்றிஎன் பேன் புவனாபதி அம்மை என்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றந் துரக்கின்ற கோட்பைந் தொடியே.

English Meaning:
Sakti`s Omnipotence

She holds in Her Form
The One Lord of Worlds all,
She creates million, million universes vast
In Her Thought;
She is draped in Cosmic Light;
She beautifies all,
Her I stood adoring.
Tamil Meaning:
எனது இச்சா ஞானக்கிரியைகளாகிய ஆற்றலில் இயைந்து நின்று அவற்றை இயக்குகின்ற, அரியதவத்தால் அடையப் படுபவளும், `சாந்த ரூபம், யமனையும் வெல்லும் வேக ரூபம்` என்னும் இரு நிலைகளையும் உடையவளும் ஆகிய அந்த உலகத் தலைவியாம் பூரண சத்தியையே நான் வணங்குதல், வாழ்த்துதல் முதலியவற்றைத் தெரிவிக்கும் சொற்களைச் சொல்லி வழிபடுகின்றேன்.
Special Remark:
புவனாபதி அம்மை - உலகத்தோடு இயைந்து நின்று அதனைச் செயற்படுத்திகின்ற சத்தியும், அச்சத்தியோடு கூடி நிற்பவ னாகிய `பதி` என்னும் சிவனும் என்னும் இருவராகவும் அறியப் படுகின்ற அம்மை. `சத்தியும், சிவமும் தம்மில் வேறல்லவாகலின், இங்குக் கூறிவருகின்ற பெருமைகளை அவ்விருவரில் எவருக்கு உரியதாகக் கூறினும் குற்றம் இன்று` என்பதை விளக்க. `அம்மை` என்றாயினும் கூறாது புவனாபதி அம்மை`` எனக் கூறினார். `இங்ஙனமாயினும், அவரவர்க்கு அன்பு செல்லும் வழியாற் கூறுதலே முறை` என்பது பற்றி இந்நூலுள் இத்தன்மைகளைச் சில விடத்துச் சிவனுக்குரியவாகவும், சிலவிடத்துச் சத்திக்குரியவாகவும் கூறப்படு கின்றன` என்பது பெறப் பட்டமை காண்க. `புவனாபதி அம்மை என்பதன் பொருள் விளங்கினமையின், `புவனாபதி` என்னும் அளவாகவே பின்னர்க் கூறுமிடத்து, அச்சொற்பொருளும் இதுபற்றி அறிந்துகொள்ளப்படும். அஃதாவது, `அம்மை என்பது ஆற்றலால் விளங்க வைத்துக் கூறப்படுதல் அறியப்படும்` என்க.
சீற்றங் கடிதல், சாந்தமாய் இருத்தல். கோள் - கருத்து. கூற்றந் துரக்கின்ற கோள் - பகையை அழிக்கும் கருத்து. ``அம்மை`` முதலியவற்றில் இரண்டனுருபுகள் தொகுத்தலாயின.
இதனால், பூரண சத்தி, `அமைதி, சீற்றம்` என்னும் இரு நிலையிலும் நின்று நலம் செய்தல் கூறப்பட்டது. வேகநிலை துன்பத்தைப் போக்குவது. சாந்த நிலை இன்பத்தை ஆக்குவது.