ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

அளந்தேன் அகலிடத் தந்தமுன் ஈறும்
அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை
அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.

English Meaning:
I Measured All

I measured the limits of space,
Its beginning and end;
I measured the men and women
In spaces everywhere;
I measured the Primal Lord
Of spaces Vast;
I measured His Grace in devotion
And knew all.
Tamil Meaning:
சத்தியது அருட் பெருமையை நான் சிந்தித்து தெளிந்தேன். அதனானே, உலகத்திற்கு ஆதியும், அந்தமும் ஆன பொருளினையும், உலகத்தார் பலபடக் கூறுகின்ற முதற்கடவுளையும், உலகில் உள்ள உயிர்களின் இயல்பையும் என் அறிவின்கண் அகப்படும்படி நன்கு உணர்ந்தேன்.
Special Remark:
என்றது, `சத்தியை விட்டு வேறாய் யாதொரு பொருளும் இல்லை` என்றவாறு. ஈற்றடியை முதலில் வைத்து, அதன் பின், `அதனானே` என்பது வருவித்துரைக்க. `முன்னும்` என்னும் எண்ணும்மை தொகுத்தலாயிற்று. அவன் - சிவன். அருள் - சத்தி; என்றது அவளது இயல்பை. ``அந்த முன்`` என்பதில் சுட்டு, `அந்தத்தை உணர்தலினும் ஆதியை உணர்தல் அரிது` என்பதை விளக்கி நின்றது.
இதனால், சத்தியை முற்ற உணர்தலே முற்றறிவாதல் கூறப் பட்டது.