ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

English Meaning:
Parasakti Evolves into Jnana and Ichcha

Parasakti, who with pervasive Para stood,
Becomes Jnana Sakti and Ichcha Sakti;
And when Kriya Sakti arrives, (from Bindu)
The Dancer immanent becomes in them all.
Tamil Meaning:
சத்தியும் சிவனும் மலரும், மணமும் போலக் குண குணித்தன்மையால் இயைந்து, பொருள் ஒன்றேயாய் நிற்கும் உண்மையைச் சிலர் சிறிதும் உணர்வதில்லை. (அதனால், இரு வரையும் வேறு வேறுள்ளவர்களாகக் கருதி, அவர்களிடையே தார தம்மியம் கற்பித்து வாதிடுவர் என்றவாறு) சிவசத்திகள் பற்றிய இவ் வுண்மையை ஒத்துணர்ந்து அவர்களிடத்தில் உணர்வு செல்ல நிற்கும் பொழுதுதான் சிவன் அவ்வுணர்வை அருட்சத்திக்கு ஏற்புடையதாகச் செய்து, அச்சத்தியோடு தானும் அதன்கண் விளங்கிநிற்பான்.
Special Remark:
``மருவொத்த`` என்றதனால், `மலரொத்த` என்பது கொள்ளப்பட்டது. உரு - பொருள். உருஒத்து நிற்றல் - பொருள் ஒன்றேயாய் நிற்றல். கரு - அடிநிலை உண்மை. `கருவை ஒத்து (உடம்பட்டு) நின்று` என்க. திரு - அருட்சத்தி. `திருவுக்கு ஒத்த` என்க.
இதனால், `சத்தியைச் சிவனின் வேறாக உணர்தல், அறியாமையின் காரியமாய், அல்லற்படுத்தும்` என்பது கூறப்பட்டது.