ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

தானது கம்இரீம் கௌமது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெலாம்
கானது கன்னி கலந்த பராசத்திக்
கேனது! வையம் கிளரொளி யானதே.

English Meaning:
Chant Krim to Gaum

From Krim to Gaum
That the Chakra, I know of;
Those who meditate deep on it
Will become dear unto that Parasakti,
The Virgin of the sylvan glades;
And they shall shine high in this world.
Tamil Meaning:
தானே சக்கரமாகின்ற முதலெழுத்து `க்ரீம்` என்பதும், ஈற்றெழுத்து `கௌம்` என்பதுமாக அமைகின்ற அந்தச் சக்கரமே ஞானத்தை விரும்புவார்க்கு நான் சொல்வது. அது சத்திக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற நல்ல சோலையாய் விளங்கும். ஆயினும், அதில் வேறறக் கலந்து நிற்கின்ற அவளுக்கு அஃது எதன்பொருட்டு வேண்டும்! உலகம் ஒளி பெற்று விளங்குவதே அதன்பயன்.
Special Remark:
பல அக்கரங்கள் உள்ள சக்கரங்கள் முதற்கண் உள்ள எழுத்தின் சக்கரமாகவே கூறப்படுதலின், முதலெழுத்தை, `தான் அதுவாவது` என்றார். `க்ரீம்` என்பதை, `கம்` என்வும், `இரீம்` எனவும் செய்யுள் நோக்கிப் பிரித்து ஓதினார். `நான் சொல்வது` என ஒருசொல் வருவிக்க. `கன்னிக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்தலாயிற்று. `அது கன்னிக்குக் கான்` என்க. ஆதலுக்கு `அதனால்` என்னும் வினை முதல் வருவிக்க. ஒளியாவதும் ஞானமே. ``ஆனதே`` என்பதன் பின், `பயன்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்றனது சிறப்புக் கூறப்பட்டது.