ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.

English Meaning:
You Will Master All Learning

Chant Aim mantra unceasing
All blessings shall follow;
You shall gain the understanding
That is beyond words and meaning of words;
With the blessing of Her, who is Queen of learning,
You shall a master of all Learning be;
No more enemies for you, here below.
Tamil Meaning:
இச்சக்கர சத்தி வாகீசுவரி யாதலின், இவளது அருள் கிடைக்கப் பெற்றவனுக்கு அவன் வேண்டிய நன்மைகள் யாவும் அவன் சொன்ன அளவிலே அங்ஙனமே முடியும். வழக்கும் செய்யுளுமாய்த் தொடர்கின்ற சொற்கள் அனைத்தையும், அவற்றின் பொருளோடு அவன் முற்ற உணர்ந்தவனாவான். விரிந்துகிடக்கின்ற இவ்வுலகில் ஓரிடத்தும் அவனுக்குப் பகையாவர் இல்லை. (நண்பரும் உறவினருமே உளராவர் என்பதாம்.)
Special Remark:
``கல்விக் கரசிவ ளாக`` என்பதனை முதலில் கொண்டு உரைக்க. `அரசி` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று. ``படர்ந்திடும் பார்`` என்றது, `பிரபஞ்சம்` என்பதன் பொருள்பற்றிக் கூறியவாறு. கூறவே ஓரிடத்தும் பகையில்லாமை கூறியதாயிற்று. கல்வியைக் கரை கண்டவர்க்கு, `யாதானும் நாடாம் ஊராம்` 1 என்பது ஈற்றடியாற் கூறியவாறு.
இதனால், வாகீசுவரி வழிபாட்டினால், மேன்மைச் சொல்லும், நிறைபுலமையும் உளவாதல் கூறப்பட்டது. மேன்மைச் சொல்லை, `நாவசைத்தால் நாடசையும்` என்று குறிப்பர்.