ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடும் நல்லுயி ரானவை யெல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துளங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.

English Meaning:
Adore Gaum Sakti and Be Blessed

Adore Sakti who over all Tattvas rule,
All good lives will bend before you;
Lust, anger and ignorance with all in terror flee
Your actions all will shining be.
Tamil Meaning:
மும்மலங்களால் வருந்துகின்ற பல உயிர்களுள் பக்குவம் எய்தப் பெற்ற உயிர்கள் சத்திதன் பெருமையை உணர்ந்து அவளை வணங்கும். அவ்வணக்கத்தின் பயனாக அவைகளைப் பற்றியுள்ள, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களும் நீங்கும். அவை நீங்கவே `அவற்றால் உண்டாகும்` என நூல்கள் சொல்லிய வினைகளும் இல்லையாம்.
Special Remark:
``நலங்கிடும்`` என்றது உயிர்களின் பொது வியல்பு உணர்த்தியது. `காமம் முதலியவை கலங்கிடும்` எனவும், `வினை துளங்கிடும்` எனவும் முன்னே கூட்டி முடிக்க. முதலடி உயிரெதுகை; ஈற்றடி இனவெதுகை. `துலங்கிடும்` என்பது பாடமாயின், அதனை நேரே காமம் முதலியவற்றிற்கு முடிபாக்கி, `வினை கலங்கிடும்` எனக் கூட்டி முடிக்க.
இதனால், `சத்தியை இச்சக்கர வழியாக வழிபடுதல் பக்குவர்க்கே உண்டாம்` என்பதும் அதனால் அவர்க்கு உளவாம் பயனும் தொகுத்துக் கூறப்பட்டன.