ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே.

English Meaning:
You Will Reach Siva by Worship of Srim Sakti

They meditate on Her,
That they immortals become,
The Lord of immortals shall bless you;
He who wears the Ganga and contains Her,
Him you persevere to reach.
Tamil Meaning:
மெய்யறிவுடையோர் உண்மை அமரர்களாதல் பொருட்டு அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் பிளந்துகொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையைச் சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் பணிகின்ற சத்தியை நீவிர் வழிபட்டு மேற்கூறிய பயன்களைப் பெறுங்கள்.
Special Remark:
அமரர் - இறவாதவர், இப்பெயர் மார்க்கண்டேயர் போலும் சிவனடியார்கட்கே உண்மையில் பொருந்தும் ஆதலின், சிவபெருமானை, ``அறிந்திடுவார்கள் அமரர்களாகத் தெரிந்திடு தேவன்`` என்றார். வானோர் - வானுலகில் உள்ளவர். `வானோராகிய தேவர்கள்` என்க. `வானத்து வன்புனல்` என்றவாறு. சடையில் புல் நுனிமேல் துளியளவாக மலர் போலும்படி எளிதில் ஏற்றமை தோன்ற, ``சூடி`` என்றார். முரிதல் - வளைதல்; இங்கு, பணிதலைக் குறித்தது. நாயக நாயகி பாவம் பற்றி இன்பச்சுவை தோன்றச் சிவன் உமைதன் ஊடலைத் தீர்க்க அவளை அடிபணிவதாகப் புனைந்துரை கூறும் இலக்கிய மரபினை இங்குச் சத்திதன் பெருமை புலப்படுதற்கு எடுத்தாண்டார். ``முரிந்திடுவானை`` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சத்திதன் பெருமை கூறும் முகத்தால், மேற்கூறிய பயன்கள் உளவாதல் வலியுறுத்தப்பட்டது.