ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

நடம்இரண் டொன்றே நளினமதாய் நிற்கும்
நடம்இரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடம்இரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.

English Meaning:
The Dance Transforms Jiva Into Siva

The Dance in Letters Two
It is the Dance joyous;
It is the Dance of dissolution;
It is the Dance that leads to bliss;
It is the Dance that is Siva Linga
It is the alchemy that transforms
The coppery Jiva into golden Siva.
Tamil Meaning:
``தனிநடம்`` என மேற்குறிக்கப்பட்ட சிவ நடனம் இரு வகைத்து. ஒன்று இன்பத்தையே தரும்; மற்றொன்று துன்பத்தையே தரும். துன்பத்தைத்தருவது மறைத்தலைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும்; இன்பத்தைத் தருவது விளக்கத்தைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும். பின்னதனால் விளைகின்ற நலம் செம்பு பொன்னானது போல அதியற்புதம் உடையதாகும்.
Special Remark:
பிரிநிலை ஏகாரங்கள் பிரித்துக் கூட்டப்பட்டன. நளினம்- இன்பம். நமனது செயலாகிய கொல்லுதலை ``நமன்`` என்றது ஆகுபெயர். அதனின் மிக்க துன்பச்செயல் இன்மையின் அதனைக் கூறினார். இன்பம் வீடும், துன்பம் பந்தமும் ஆதல் வெளிப்படை. இக் கூத்து இரண்டும் முறையே, `ஞான நடனம், ஊன நடனம்` எனப்படும். மறைத்தலைச் செய்யும் எழுத்துக்கள்நகார மகாரங்கள். அவை திரோதான சத்தியும், மலமுமாய் நிற்பனவாம். விளக்கத்தைச் செய்யும் எழுத்துக்கள் சிகார வகாரங்களாம். அவை முறையே சிவமும், அருட்சத்தியுமாய் நிற்பன. இவற்றான் அமையும் இரு வேறு வடிவங்களை ``ஆடும் படி கேள்``, ``சேர்க்கும் துடி சிகரம்`` என்னும் உண்மைவிளக்க வெண்பாக்களால் அறிக. `நகை செய்யும் மந்திரம்` என ஓதுதல் பாடம் அன்று.
செய்யுட்கு ஏற்ப ``மந்திரம், லிங்கம்`` என்றவற்றை வேறு வேறிடத்து வைத்து ஓதினாராயினும், இரண்டையும் ஈரிடத்தும் ஒருங்கோதுதல் கருத்தென்க. உருவத் திருமேனியும் `வியத்தலிங்கம்` எனப்படுதல் அறிந்துகொள்க. `ஒன்று நகை செயா மந்திரம்` எனவே, `மற்றொன்று நகை செயும் மந்திரம்` என்பது தானே விளங்கிற்று. ``இரண்டு`` என வந்தவை மூன்றில் முதலது பயனிலையாயும், ஏனையவை ஏழன் உருபேற்ற பெயராயும் நின்றன. உருபேற்றுத் தொடர்ந்த பெயர்களை நான்காம் அடியிலும் கூட்டிப் பொருள் கொள்க. `செம்பு, பொன்` என்னும் உவமைகள் முறையே உயிர்க்கும், சிவத்திற்கும் ஆயின.
இதனால், ``வாறே சதாசிவம்`` என்ற மந்திரத்துள் குறிக்கப் பட்ட இருவகை நடனத்தின் இயல்புகளும் தெரித்துக் கூறப்பட்டன.