ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர்இல்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்களுக்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.

English Meaning:
Letters Three – Si Va Ya

Letters Si Va Ya are bliss perpetual;
Letters Si and Ya are Jnana;
Si-Va-Ya is unalloyed joy;
Not many know this,
They who realizes this in Joy
Will Him behold in Dance-Joyous (Ananda).
Tamil Meaning:
திருவைந்தெழுத்தில் துன்பத்தைத் தரும் பாச எழுத்துக்களாகிய நகாரம் மகாரம் இரண்டும் நீங்க, எஞ்சிய மூன்றும் நின்றவழி உளதாவது இன்பமே. அம் மூன்றெழுத்துக்களில் சிகாரமும், வகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்கள் அறிவெழுத்துக்களாம். (சிகாரம் அறிவைச் செலுத்துவதும், வகாரம் செலுத்தியவாற்றிலே சென்று அறிவதும் ஆம்.) அவற்றுள்ளும் அறிவதாகிய வகாரம் தன்னைச் செலுத்துவதாகிய சிகாரத்திலே அடங்க, சிகாரமும் வகாரமும் ஆகிய இரண்டெழுத்தும் சிகாரமாகிய ஓர் எழுத்தேயாய் விடும். (அதுவே ஆனந்தாதீத நிலையாம்.) இவ்வாறு, `சிவாய` என்னும் மூன்றெழுத்து ஆன்மாக்களுக்கு ஆனந்தப்பேற்றினை வழங்குவனவாதலை அறிபவர் மிகச் சிலரே. அவற்றை அன்போடு அறிய வல்லவர்கட்கு ஆனந்தம், அம்பலத்தில் கண்கூடாகக் காணப்படும் அருள்நடனத்திலேயே எளிதில் உண்டாகும்.
Special Remark:
``சிவாய`` எனப்பின்னர் வருதலின், முன்னர் வாளா, ``மூன்று`` என்றார். `இரண்டு அறிவு; அவை ஒன்றும் ஆகும்` என்க. `ஒன்றும்` என்னும் எதிர்மறை உம்மையும், `ஆனந்தக்கூத்தாயே` என்னும் பிரிநிலை ஏகாரமும் தொகுத்தல்பெற்றன. `இரண்டு, ஒன்று` என்பன அவ்வவ்வெழுத்துக்களைத் தொகைக் குறிப்பால் உணர்த்தின. ``சிவாய`` என்பதன்பின், என்பதை என்பது எஞ்சி நின்றது. `சிவாய` என்னும் மூன்றெழுத்தில் சிகாரம் பேறும், வகாரம் பெறுவிப்பதும், யகாரம் பெறுவானும் ஆக நிற்கும் நுட்பமும், அம் மூன்றும் உள்ளவழியே ஆனந்தானுபவம் நிகழ்தலும் நல்லாசிரியர் வழி மரபில் நின்று உணர்பவர்க்கல்லது உணர வாராமையின் ``அறிவார் பலர் இல்லை`` என்றார். மூன்றாவதாக வந்த `ஆனந்தம்` அன்பின்மேல் நின்றது, சிவயோகிகட்குத் திருவம்பலக் கூத்து ஆனந்த நடனமாதல் அனுபவமாய் விளங்கலின், ``ஆனந்தக் கூத்தாய் அகப்படும்`` என்றார்.
``உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும்`` ஐம்பொறி யளவினும் எளிவர
அருளினை`` 1
என்ற அனுபவத்தினை இங்கு நினைவு கூர்க.
இதனால், அசபா யோகத்தின் முதிர்ந்த நிலையாகிய சிவ மந்திர யோகத்தினது சிறப்புக் கூறப்பட்டது.