ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

English Meaning:
Letters A and U are Feet of Lord

The peerless Feet of Lord are Letters eight
The peerless Feet of Lord are Letters Two and Five;
The peerless Feet of Lord are Letters Fifty and One
The peerless Feet are mantras seven times thousand.
Letters eight: The five letters of
Panchakshara and those Bijaksharas.
Tamil Meaning:
சிவனது, இணைதல் பொருந்திய திருவடிகளே வித்தெழுத்துக்கள் மூன்றோடு கூடி எட்டெழுத்தாய் நிற்கும் பஞ்சாக்கரமும், பத்துக் கூறுகளாகப் பகுக்கப்பட்டு நிற்கும் பிரணவமும், மூல எழுத்துக்களாகிய (மாதுருகாட்சரங்களாகிய) அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள ஐம்பத்தோரெழுத்துக்களும், ஏழு கோடிகளையுடைய பல மந்திரங்களுமாய் நிற்கும்.
Special Remark:
இணை, முதனிலைத் தொழிற்பெயர். `இணையாகப் பொருந்திய` என்றும் ஆம், `இறைவனது ஞான சத்திகிரியா சத்திகளே அவனது இரண்டு திருவடிகள்` என்பது உணர்த்துதற்கு, ``இணையார் திருவடி`` என்றார். ``இணையார் கழல்`` மூன்றும் அடையடுத்த ஆகுபெயர்களாய் நின்றன. எனவே, இணைதல், கழல் என்னும் அணியைச் சிறப்பித்து நின்றனவாம். அங்கு இணைதல், அறியப் படுதல். ``ஏழு`` என்பதும் ஆகுபெயராய் அத்துணைக் கோடியை உணர்த்திற்று. ஆயிரம், பன்மை குறித்தது.
இதனால், எல்லாவற்றிலும் நீக்கம் அற நிறைந்து நிற்கின்ற சிவ சக்திக்குச் சிறப்பிடம் மந்திரங்கள் என்பது கூறப்பட்டது.