ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

English Meaning:
Letters A, U and M

By One Letter, A, He all worlds became;
By Two Letters (A and U), He the Two became – Siva and Sakti;
By Three Letters (A,U and M), He the Light* became;
By Letter M was Maya ushered in.
Tamil Meaning:
`ஓம்` என்று ஓரெழுத்தாகச்சொல்லப்படுகின்ற சமட்டிப் பிரணவத்தின் பொருளாகிய `இலய சிவன்` என்னும் அருவ நிலையால் உலகெங்கும் வரம்பின்றி நிறைந்து நின்று பின், `அ, உ` என்று, மகாரம் இன்றி இரண்டெழுத்தாகச் சொல்லப்படுகின்ற சூக்கும வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக்களின் பொரு ளாகிய சிவமும், சக்தியும் செம்பாதியான ஒளிவடிவாயுள்ள `போக சிவன்` என்னும் அருவுருவ மூர்த்தியாய் உலகத்தைத் தொழிற் படுத்த நினைந்து, பின், மேற்கூறிய இரண்டெழுத்துடன் மகாரத்தையும் கூட்டி `அ,உ,ம்` என மூன்றெழுத்தாகச் சொல்லப் படுகின்ற தூல வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக் களின் பொருளாகிய `அயன், அரி, அரன்` என்னும் மூவராம் `அதிகார சிவன்` என்னும் உருவ மூர்த்தியாய்ப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களில் தலைப்பட்டு நிற்கின்ற சிவனை அவனது திருவைந்தெழுத்தில் மகாரத்தின் பொருளாகிய மலத்தின் மறைப்பினால் அறியமாட்டாது உலகம் திகைக்கின்றது.
Special Remark:
எனவே, `பிரணவத்தினை அதன் முறைகளை யெல்லாம் உணர்ந்து ஓதின் அவனைப்படிமுறையால் உணர்ந்து உய்யலாம்` என்பது கருத்தாயிற்று. உணரப்படுபொருளாகிய சிவனது சிறப்பினை உணர்த்தும் முகத்தால் அவனை உணர வேண்டுவதன் இன்றியமையாமையை உணர்த்தவேண்டி இவ்வாறு சிவன்மேல் வைத்து ஓதினாரேனும், பிரணவத்தை ஓதும் முறைமைகளையும், அவற்றது பயனையும் உணர்த்தலே கருத்தென்க.
`இருவராய் இசைந்து` என மாற்றியுரைக்க. ``இசைந்து`` என்ற தனால், அஃது அவ்விருவரும் வேறு நில்லாது ஒன்றாய் இயைந்து நிற்கும் அருவுருவ நிலையைக் குறித்ததாயிற்று. முளைத்தல், உருவாய்த்தோன்றித் தொழில் இயற்றல், `சோதியை` என்பதன்பின், `அறியாது` என்னும் சொல்லெச்சமும், மயக்கம் உறுதற்கு, `உலகம்` என்னும் எழுவாயும் வருவித்துக் கொள்க. இதன்கண் ஈரடி எதுகைவந்தது. உயிரெதுகையுமாம். `மவ்வெழுத்து` என்பது இத்தொடை நோக்கி விகாரமாயிற்று.
இதனால், அசபை சிவபெருமானுக்கு அருள்வாயிலாய் நின்று அவனை உணர்வித்தல் கூறப்பட்டது.