ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.

English Meaning:
The One-Letter Mantra of Our Lord

I praise, I laud,
Jnana that is our Refuge;
I adore the Holy Feet of the Lord,
Constant in my thought;
I expound Siva Yoga;
Hearken you!
I chant the One Letter, Aum
Dear to our Lord.
Tamil Meaning:
நமக்கெல்லாம் தலைவனாகிய சிவனுக்குரிய ஓரெழுத்து மந்திரமாம் பிரணவத்தின் சிறப்பே, ஏனை எல்லா மந்திரங்களினும் உயர்வுடையதாதலை இத்தந்திரத்துள் யான் கூறுவேன். அதனானே, ஞானங்கள் பலவற்றினும் மேலானதாக உயர்ந்தோர் சொல்கின்ற சிவஞானத்தைப் புகழ்ந்து பாதுகாப்பவனும், யாவருடைய உள்ளத்திலும், `சிவனது திருவடியே பொருள்` எனத்தெளிவிப்பவனும், சிவயோகத்தையும் சுருங்கக் கூறுபவனும் ஆவேன். பிரணவத்தினை அறிய விரும்புபவர்களே! இதனைச் செவிக்கொண்மின்.
Special Remark:
`நம் பிரான் ஓர் எழுத்தே ஏற்றுகின்றேன்; (அதனால்) புகல் ஞானத்தைப் புகழ்ந்தும் போற்றுகின்றேன்; சிந்தை நாயகன் சேவடி தேற்றுகின்றேன்; சிவயோகத்தைச் சாற்றுகின்றேன்; அறையோ` எனக்கூட்டுக. சிந்தை நாயகன் சேவடி தேற்றுகின்றேன்; சிவயோகத்தைச் சாற்றுகின்றேன்; அறையோ` எனக் கூட்டுக.
``புகழ்ந்தும்`` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம். ஏற்றுதல் - உயர்த்துதல்; என்றது உயர்வை உணர்த்துதலை.
`ஓர் எழுத்து` என்பது ஓகாரத்தைக் குறித்தல் மந்திர நூல் மரபு. `ஏகாட்சரம்` என்பர். யாதொரு மந்திர எழுத்தும் இறுதியில் மகர மெய்யைப் பெற்று நிற்றலும் மந்திர மரபு. அதனால், ஓகாரம் `ஓம்` என நின்று, `ஓங்காரம்` என வழங்கப்படும். மெய்யெழுத்து எண்ணப்படுவ தில்லையாகையால், `ஓம்` என நிற்பினும் ஓரெழுத்தேயாம். `மந்திரம்` என்பது ஓரெழுத்தாலாய மந்திரத்திற்கே சிறப்பாக உரிய பெயராதல் மந்திர நூல்களால் அறியப்படுவது. அவற்றின் இறுதியில் நிற்கும் மகர மெய் `விந்து` (பிந்து) எனப்படும்.
சொல்லுவோன், தனது கருத்தைப் பிறர்க்கு இனிது விளங்க வெளிப்படக் கிளந்து சொல்லுங்கால், புறத்து நிகழ்கின்ற இசையோசையையே ஒற்றுமை பற்றி எழுத்தோசையாக ஆசிரியர் கூறுவராயினும், `உண்மையில் எழுத்தோசை அவ் இசையோசையின் வேறே` என்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார், ``அகத்தெழு வளியிசை`` எனவும், `அதனை யான் இங்குக் கூறிற்றிலேன்` எனவும் கூறியுணர்த்தினார். மேற்குறித்த இசையோசையை, ``எழுந்து புறத்திசைக்கும் -மெய் தெரி வளியசை என்றார்.
`நாதம்` என்பது, எழுத்தோசைக்கே பெயராக மெய்யுணர்வு நூல்கள் (தத்துவ சாத்திரங்கள்) கூறும். இசையோசையை `ஓசை` எனவும், எழுத்தோசையை `ஒலி` எனவும் குறியிட்டு, ``ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே`` 2 எனத் திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்தார்.
இசையோசை கருவியாக அன்றி எழுத்தோசையை நேரே உணரும் ஆற்றல் உலகர்க்கு இல்லை.
`ஓ` என்பது இசையோசையைக் குறிக்கும் குறிப்பிடைச் சொல் என்பது, `ஓ` என அரற்றினான்` என்பது முதலிய வழக்குக் களால் நன்கு அறியப்படும். அதுபற்றி இசையோசைக்கு முதல் `ஓ` என்பது பட்டு நிற்றலின், இசையோசையானே அறியப்படுகின்ற எழுத்தோசைக்கும், `ஓகாரமே முதல்` எனப்பட்டது. படவே, சொல்லுலகம் முழுவதற்கும் ஓங்காரமே முதலாயிற்று. அதனால், எல்லா மந்திரங்கட்கும் முன்னும், பின்னும் ஓங்காரத்தைக் கூட்டிக் கூறுதல் இன்றியமையாததாயிற்று. இவ்வாற்றால், சொல்லுலகம் முழு வதற்கும் முதலாய் நிற்கும் ஓங்காரத்திற்கு, எல்லாவற்றிற்கும் முதல் வனாகிய சிவபெருமானே முதல்வனாதலும் இயல்பான் அமைந்தது. அதனால், நாயனார் ஓங்காரத்தை, ``நம்பிரான் ஓரெழுத்து`` என்றார். மொழிகளில் உள்ள எழுத்துக்கள் போலச் சொற்கு உறுப்பாய் நின்று பொருள்விளக்காமையால் இதனை `ஊமையெழுத்து` என்பர்.
சொல்லுலகத்திற்கு முதலாய் இதனை நிற்றல்பற்றி ஓங்காரம் `தாரக மந்திரம்` எனவும்படும். பற்றுக் காரணமாகத் தேவர் பிறரை முதற்கடவுளராக எண்ணும் சமயத்தவர் இத்தாரக மந்திரத்திற்கும் தாம்தாம் கொள்ளும் கடவுளரையே முதல்வராகக் கூறி மகிழ்வர். அவையெல்லாம் வெறும் முகமனேயாதல் அக்கடவுளரது இயல் புகளை உள்ளவாறு உணர்வார்க்குத் தெற்றெனவிளங்கும்.
எழுத்தோசையைப் பற்றுக்கோடாகக்கொண்டே மக்கட்கு எண்ணங்கள் பலவும் தோன்றும். புதிது புதிதாகத் தோன்றி வரும் எண்ணங்கட்குக் கடலில் புதிது புதிதாகத் தோன்றிவருகின்ற அலையை உவமையாகக் கூறும் சிவஞானபோதம்.
புதிது புதிதாய்த் தோன்றிவரும் எண்ணங்கட்கு மேற்கூறிய வாற்றால் முதலாதல்பற்றி ஓங்காரம், `பிரணவம்` எனப் பெயர் பெற்றது. நவம் - புதுமை.
சொல்லுலகம் அனைத்திற்கும் முதல் ஓங்காரம் எனப்படுதல் பற்றி, `அனைத்து மந்திரங்களும் ஓங்காரத்தின் சூக்கும பரிணாமமே` என்பர். எனினும், அதன் கருத்து மந்திரங்கள்,
நாதமாய் நிற்கும் சுத்த மாயையின் காரியம் என்பதே. அதனால், `ஓங்காரம்` `ஓரெழுத்து` என்னும் சொற்கள் `ஓம்` என ஒலிக்கும் இசையோசையைக் குறித்தலேயன்றி. சங்கேதத்தால் நாதத்தையும் குறிக்கும்.
அவ்வாறான மந்திரங்களுள் `அம், சம்` என்னும் இரண் டெழுத்தாகச் சொல்லப்படுகின்ற மந்திரம் `அம்ச (ஹம்ஸ) மந்திரம்` எனப்படும். அவ்இரண்டெழுத்தும் பிராணாயாமத்துள் இரேசக பூரகங்கட்கு உரியனவாம். இரேசக பூரகங்கள் யோக முறைப்படி அறிந்து செய்யப்படும்பொழுது அம்மந்திரச் சேர்க்கைகளோடு செய்யப்படுதல் சிறப்பு. அது பிற மந்திரங்கள் போலாது பிராணனின் இயக்கமாகவே கொள்ளப்படுதலால், `அசபை` (செபிக்கப்படாமல் தானாகவே இயல்வது) எனப் பெயர்பெற்றது. எனவே, பிராண இயக்கத்தை உடைய ஒவ்வோர் உயிரிடத்தும் இஃது உளதாகக் கொள்ளப்படும்.
திருப்பாற்கடலில் திருமால் கொள்கின்ற அறிதுயிலிலும் இம்மந்திரம் இயல்பாக விளங்கினமையால், `அவரது இதயத்தில் வீற்றிருந்த தியாகேசப்பெருமான் அங்கு அசபா நடனம் புரிந்தனர்` எனவும், அப்பெருமானே முசுகுந்தச் சக்கரவர்த்தியால் திருவாரூரில் கொணர்ந்து எழுந்தருள்விக்கப்பெற்றமையால் `திருவாரூர்த் தியாகேசரது நடனம் அசபா நடனம்` எனவும் கூறுவர்.
அம்ச மந்திரத்துள் `சம்` என்பதை விசர்க்கத்துடன் கூடியதாக ஆக்கி `ச:` என முன்னும், `அம்` என்பதை `அஹம்` என வேறுபடுத்திப் பின்னும் வைத்து உச்சரிக்க வருவதே `சோஹம்` என்பது. `அவன் நான்` என்பது இதன் பொருள். எண் வகை யோகமும் கைவந்த நிலையில் தியானத்தானமாகிய ஆஞ்ஞையில் யோகி இச் சோஹம் பாவனையைச் செய்வானாயின், `அவன்` எனக் கருதுதல் இறைவனையே யாகலின், சாத்திய மந்திரங்களால் மந்திரான்மாவாய் நிற்கின்ற அவ்யோகி பசுத்துவம் நீங்கிப் பதிநிலையை எய்திப் பரமா காச வடிவாக ஆவான். சிவயோகி, `சோஹம்` எனப் பொதுப்படப் பாவியாது, `சிவோஹம்` எனச் சிறப்பாகப் பாவிப்பான். அதனால், அவன் சிவமாய் நின்று சிவானந்தத்தை நுகர்வான். ஞானத்தை எய்தினோரும் நிட்டையில் நிற்கமாட்டாதபொழுது அம்மாட் டாமைக்குக் காரணமாகிய வாசனா மலம் நீங்குதற் பொருட்டுத் திருவைந்தெழுத்தை அதற்குரிய முறையில் சுத்தமானதமாகக் கணிக்கும் போது சிவோகம் பாவனையை உடையவராயே இருந்து கணிப்பர். தத்துவமசி முதலிய மகா வாக்கியங்களும் `சோஹம்` என்னும் பொருளையே வேறுவேறு வகையில் கூறுவனவாம். `அம்சம்` என்ப தேயன்றி, இச் `சோஹம்` என்பதும் அசபையாகச் சொல்லப் படும். `சோஹம்`` என்பதன் பொருள் திருவைந்தெழுத்தில் இன்னும் விரிவாக அமைந்துள்ளது. ஆகவே, பிரணவத்தின் காரியங் களுள் அம்சம், சோஹம், திருவைந் தெழுத்து ஆகிய மந்திரங்கள் முதன்மை யுடையன. ஆகவே, அவை யெல்லாம் குறிப்பால் உணரக் கூறுகின்ற இவ்வதிகாரத்தை நம்பிரான் ஓர் எழுத்தைக் கூறுவதாக நாயனார் அருளிச்செய்தார்.
இதனால், `இவ்வதிகாரம் நுதலிய பொருள் இது` என்பது கூறப்பட்டது.