ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.

English Meaning:
Dances in the Golden Temple

In the Golden Temple is the Atbhuta (Wonder) Dance,
In the Golden Temple is the Ananda (Bliss) Dance,
In the Golden Temple is the Anavarata (Eternal) Dance,
In the Golden Temple is the Pralaya (Deluge) Dance,
In the Golden Temple is the Samhara (Dissolution) Dance.
Tamil Meaning:
பொன்னால் இயன்றுள்ளதாகிய மேற்கூறிய தென்போது, மேற்கூறியவாறு ஞானமாய் நிற்க. அதன் கண் நின்று சிவபிரான் நிகழ்த்துகின்ற திருக்கூத்து, அந்த ஞானத்தின் வழியே விளையும் ஆனந்தமாய் நிகழும். மேலும், அத்திருக்கூத்து இடை யறாது நிகழ்ந்து, ஊழிக்காலம் முழுவதும் உலகைத் தொழிற் படுத்துதலாகிய தூல ஐந்தொழிலை இயற்றுவதுமாம். அதுவேயன்றிச், சருவ சங்காரத்தின்பின், உலகத்தை மீளத் தோற்றுவித்தற்பொருட்டுச் செய்யப்படுகின்ற செயல்களாகிய சூக்கும ஐந்தொழில்களை இயற்றும் திருக்கூத்தும் அதுவேயாம்.
Special Remark:
``பொன்னம்பலம் அற்புதம் ஆமே; திருக்கூத்து ஆனந்தம் ஆமே; அத்தாண்டவமே பிரளயம் ஆகும்`` எனக்கூட்டுக. அற்புதம் - ஞானம். ``பொன்னம்பலம் அற்புதம் ஆமே`` என்றது, திருக்கூத்து ஆனந்தமாதற்குரிய இயைபுணர்த்தற்குக்கூறிய அனு வாதம். அவ்வியைபால் திருக்கூத்து ஆனந்தமாதலை உணர்த்தியவர், அதுதானே தூல ஐந்தொழில் நடன மாதலின் இயைபு உணர்த்தற்கு, அனவரத தாண்டவமாதலை, முன்னர்க் கூறினார். மூன்றாம் அடியில் ``ஆமே`` என்பதன்பின் ``அதனால்`` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ``பிரளயம்`` என்றது ``ஊழி`` என்னும் பொருளதாய், ஆகுபெயரால் அதன் கண் நிகழும் தூல ஐந்தொழிலை உணர்த்திற்று. ``ஆம்`` என்பதன்பின் எல்லா இடத்தும் தேற்றேகாரம்புணர்த் தோதினார், அங்ஙனம் ஆகிநின்றதன் அருமை புலப்படுத்தற்கு. ``சங்காரம்`` என்றது அதன் முடிவை. அருமை, காண்டல் கூடாமையை உணர்த்திற்று. ``சூக்குமம்`` என்றவாறு. இச்சூக்கும நடனத்தைக் காண்பவள் அம்மை ஒருத்தியே, அவ்விடத்துப் பிறர் ஒருவரும் இல்லாமையால் தாண்டவம் ஒன்றேயாயினும், அதன் பகுதிகள் பலவாதல் பற்றி, ``தாண்டவங்கள்`` எனப்பன்மையாகக் கூறினார். ஈற்றில் நின்ற ஏகாரம் பிரிநிலையாய், ``அத்தாண்டவம்`` என்றதனோடு இயைவதாய் நின்றது.
அசபை தென்பொதுவாதலின் சிறப்புணர்த்தற்கு அப்பொது வின் சிறப்பை மேலைத்திருமந்திரத்துள் வகுத்தோதிய நாயனார், அசபை அப்பொதுவில் நிகழும் திருக்கூத்துமாய் நிற்றலின் சிறப்பை வருகின்ற திருமந்திரத்தால் உணர்த்தற்கு, அத்திருக்கூத்தின் சிறப்பை இதனால் வகுத்தோதினார் என்க.