ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்துத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.

English Meaning:
One Letter Aum is Divine Dance
That which became Tandava Dance is One Letter Aum
That which became Tandava is Grace-act of Lord
He who performed Tandava is One Being Uncreated
In the Golden Hall is Tandava Dance.
Tamil Meaning:
மேற்குறித்த அனவரத தாண்டவ உருவாய் நிற்கின்ற ஒப்பற்ற திருவைந்தெழுத் தாவதும் ``ஓர் எழுத்து`` எனப்பட்ட அசபையேயாம். அத்தாண்டவம் உயிர்கட்கு அருள்புரியும் செயலே, அதனால், அஃது ஒப்பற்ற பரம் பொருளால் செய்யப்படுகின்றது. இப்பெருமையை உணர்த்தும் குறிப்பே அத்தாண்டவம் நிகழும் அம்பலம் பொன்மயமாய் நிற்றல்.
Special Remark:
கூத்தப் பெருமானது வடிவம் ஐந்தெழுத்தாதல் நன்கறியப்பட்டதாகலின், அதனை அனுவாதமாகக்கூறி, அத்தகைய ஐந்தெழுத்தாய் நிற்பதும் அசபையே என்றார். அதனானே, அசபை கூத்தப்பெருமானது வடிவாதலும் தானே அமைந்தது. ```தனி யெழுத்தும்`` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது. இங்ஙனம் உணர்த்திய பின்னர் இயைபு பற்றியும், மேல் வகுத்துக் காட்டிய தாண்டவத்தின் சிறப்பும், அதுநிகழிடம் ஆகிய அம்பலத்தின் சிறப்பும் உணர்த்தினார் என்க.
கூத்தப் பெருமானது வடிவம் ஐந்தெழுத்தால் அமைந் திருத்தலை உண்மைவிளக்கம் முதலியவற்றான் அறிக. மேல் ``அன வரத தாண்டவம்`` என்றதனையே இதனுள்``தாண்டவம்`` எனச் சுருங்கக் கூறினாராதலின், ``தாண்டவக் கூத்து`` என்பது இருபெய ரொட்டாம். ``பொன்போற் பொதிந்து`.1 ``பொன்போற் புதல்வர்`` 2 ``பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரை`` 3 என்றாற் போல்வன வற்றால் பொன்னினது சிறப்பினை உணர்க. தற்பரத்தால் செய்யப் படுவதனை, ``தற்பரம்`` என்றார். `ஓரெழுத்` எனத் தகரவுகரமின்றி ஓதுதல் பாடம் அன்று.
இதனால், அசபை கூத்தப்பெருமானது வடிவாதற் சிறப்புடைய திருவைந்தெழுத்தாயும் நிற்றல் கூறப்பட்டது.