ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்
துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே.

English Meaning:
Siddhanta Agamas Are Filled With Vedic Wisdom

The mantram ``Soham``
That Vedantins intone
Is but Siva Yoga
That is exalted;
Thus said Siddhanta;
Verily is it apparent
That Agamas are scriptures
With Vedic Wisdom filled.
Tamil Meaning:
பொது மறையாகிய வேதத்தை மட்டுமே நூலாகக் கொண்டு, சிவாகமங்களை நூலாகக்கொள்ளாதவர்கட்குத் தலையான மகாவாக்கியமாய் உள்ளது, ``ஸோஹம் அஸ்மி`` என்பது [இதன் பொருள், `அது நான் ஆகின்றேன்` அல்லது, `அவன் நான் ஆகின்றேன்` என்பது `தத்துவமசி` மகாவாக்கியத்தில் முன்னிலையில் வைத்துச் சொல்லப்பட்ட பொருளே இதில், தன்மையில் வைத்துச் சொல்லப்பட்டது. ஆகையால் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளது வடிவு வேற்றுமையே யன்றிப் பொருள் வேற்றுமையில்லை. `தத்துவமசி` மகாவாக்கியம், மாணவனுக்கு உபதேசிக்கும் ஆசிரியர் கூற்று. `ஸோஹம் அஸ்மி` மகாவாக்கியம், ஆசிரியர் உபதேசித்த பொருளை அனுபவமாகக் காணும் மாணவன் கூற்று. இவற்றால் இவை முன்னிலையிடத்தும், தன்மையிடத்தும் ஆயின].
இனிப் பொதுமறையாகிய வேதத்தோடு, சிறப்பு மறையாகிய சிவாகமங்களையும் நூலாகக் கொள்வோர், வேதாந்தத்தில் `ஸோக மஸ்மி` எனப் பொதுவாகக் கூறப்பட்டது, உண்மையில், `சிவோஹ மஸ்மி` எனக்கொள்வர். (இதன் பொருள், `சிவன் நான் ஆகின்றேன்` என்பது). அக்கொள்கையே சிறப்பு மறையாகிய சிவாகமங்கள் ஆராய்ந்து காட்டும் முடிநிலை முடிபாகும். அந்த முடிபைப் பல்லாற்றா -னும் வலியுறுத்த எழுந்த நூல்களே `சிவாகமம்` எனப்பெயர் பெற்று விளங்குகின்றன.
Special Remark:
`இருவகை நூல்களின் முடிவும் பொதுவும், சிறப்பும் ஆகின்ற அத்துணையேயல்லது, அவற்றிடையே பிறிது வேற்றுமை யில்லை` என்பது குறிப்பு.
`மாமறையாளர்தம் சென்னியது சோகம் ஆம்` எனவும், `ஈது, ஆன சிவோகமாம் என்ன, அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்` எனவும் இயைத்துக் கொள்க. ``தோன்றும்`` என்னும் பயனிலைக்கு, `அது` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
``பண்டை மறைகளும் `அது நான் ஆனேன்` என்று
பாவிக்கச் சொல்லுவது இப்பாவகத்தைத் தானே``*
என்னும் சிவஞானசித்தியில், ``இப்பாவகம்`` என்றது, `சிவன் நான் ஆனேன்` என்னும் சிறப்புப் பாவனையையேயாம்.
ஒருவனை, `அவன்` எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும், ஒருபொருளை, `அது எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும் அக்கூற்றைக் கேட்டவனுக்கு என்ன பயன் உண்டாகும்? பொதுவாகச் சுட்டியவற்றைப் பின்பு சிறப்பாகச் சுட்டியவழியே, கேட்பவனுக்குப் பயன் உண்டாகும். எனவே, பொதுக்கூற்றுச் சிறப்பிற்கு முன்னோடியேயன்றி, அதுவே முடிநிலை முடிபு ஆகாமை உணர்க.
``அதுபழச் சுவையென, அமுதென, அறிதற்(கு)
அரிதென, எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருஉரு; இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு``*
என்னும் அருள்மொழியால், `பொதுவாக விளக்கமின்றியிருக்கும் மகாவாக்கியப்பொருளைச் சிறப்பாகத் தெளிய உணர்த்துவதே ஆசிரியர் வழங்கும் அருள் உபதேசமொழி` என்பது விளங்கும்.
`தத்துவமசி` என்னும் பொது வாக்கியமே, `சிவத்துவமசி` எனச்சித்தாந்த ஆசிரியரால் சிறப்பாக உபதேசிக்கப்படுகின்றது. `ஸோஹமஸ்மி` என்னும் பொது வாக்கியமே. `சிவேஹமஸ்மி` எனச்சித்தாந்த மாணவனால் சிறப்பாகப் பாவிக்கப்படுகின்றது.
`சிவாய` எனநிருவாண தீக்கையில் உபதேசிக்கப்படுகின்ற முத்தி பஞ்சாக்கரத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதனால், `ய, சி, வா` என அமையும் எழுத்துக்கள் முறையே `துவம், தத், அசி` என்னும் பதங்களாய் அமைதல் விளங்கும். அதனால் உபதேசிக்கப்பட்ட அந்த மூன்றெழுத்துக்களை விந்துத்தானமாகிய புருவ நடுவில் வைத்துத் தியானிப்பதனால், சிவோஹம் பாவனை, அஃதாவது `நான் சிவன் ஆகின்றேன்` என்னும் பாவனை அமைந்து விடுகின்றது.
`தத்துவமசி` என்பதேமகாவாக்கியம் ஆயினும், `துவம்ததசி` என்பதே பொருளாதல் போல, `சிவத்துவமசி` என்பதே மகா வாக்கியம் ஆயினும், `துவம்சிவாசி` என்பதே பொருளாதலின், அப் பொருள் மேற்கூறிய மூன்றெழுத்துக்கணிப்பால் அமைதலை உணர்க.
இதனால், வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றாம் முறைமையும். அவற்றுள் சித்தாந்தமே சித்தாந்தம் ஆதலும் தெரித்துக் கூறப்பட்டன.