ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

தத்துவ மாகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன்நல் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

English Meaning:
All States are Tattvas or Steps Only to Siva-Sayujya

The Form and Formless States
Are alike Tattvas;
The Bindu, Nada and Sadasiva too
Are Tattvas verily;
So too is Jiva`s (Tvam Pada and Tat Pada);
Tattva truly is where Tatpara is in Siva-Sayujya.
Tamil Meaning:
சித்தாந்தத்தில் சொல்லப்படுகின்ற உருவம், அருவம் உருவாருவம் ஆகிய சிவவடிவங்களும், அவற்றிற்கு இடமாகின்ற விந்து, நாதம், சாதாக்கியம் ஆகிய நிலைக்களங்களும், சீவனும், அதனின் மேம்பட்ட சிவன், சத்தி, சதாசிவன் ஆகிய கருத்தாக் -களும் உண்மைகளேயன்றி, மேற்கூறிய வேதாந்தத்தில் சொல்லப் படுபவன போல, பரிணாமமோ, ஆபாசமோ அல்ல. ஆகவே, சீவன் சிவனோடு, கதிரவன் ஒளியில் விளக்கொளிபோல இரண்டறக் கலக்கும் சித்தாந்த முத்தியே உண்மை முத்தியாம்.
Special Remark:
தத்துவம் - உண்மை. `தத்துவமாகும்` என்னும் பயனிலை நான்கடிகளிலும் முதற்கண்ணே நின்றது. சகளம் - உருவம். அகளம் - அருவம். இவ்விரண்டைக் கூறியதனால் சகள நிட்களமாகிய உருவாருவமும் பெறப்பட்டது. தன்பரம் - தனக்கு மேலே உள்ளவர். அவர் சதாசிவர் முதலிய கடவுளர். இவரையும், சீவர்களையும், மற்றும் இவர்களது தனு கரண புவன போகங்களையும், `கனவிற் காணப்படும் மயக்கக் காட்சிபோல வியாவகாரிக சத்தைகள்; பாரமார்த்திகத்தில் இவையெல்லாம் பொய்யாய் ஒழியும்` எனக் கூறுவர் மாயாவாதிகள். `அது பொருளன்று` என வலியுறுத்தற்கு அடிதோறும் ``தத்துவம் ஆகும்`` எனக்கூறினார்.
இதனால், மேற்கூறிய வேதாந்தப்பொருள் தூலாருந்ததி முறைமைத்தாதல் வலியுறுத்தப்பட்டது.