ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

உண்மைக் கலைஆறொன் றைந்தின் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்(து)
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்த மாமே.

English Meaning:
Of the Kalai Sixteen

Unmanai Kala ends in the Sixteenth,
Unmanai Kalanta ends beyond in the Seventeenth;
When Unmanai Kala is reached
Then is Nadanta;
Unmanai Kala is verily a goal great.
Tamil Meaning:
உண்மையை உணர்த்தும் கலைகள் பலவாகச் சொல்லப்படினும் அவை அனைத்தும் பன்னிரு கலைக்குள் அடங்குவனவாம். இனி, அனைத்துக் கலைகளையும் விடாது கடக்க வேண்டின், பதினாறைத்தாண்டி அப்பால் செல்லுதல் வேண்டும், `நாதந்தம்` என்பது, இவ்வாறு கூறப்படுவனவற்றின் இடையே நிற்கின்ற ஒன்று. ஆகையால், அதையே `உண்மை` என்று சொல்லின், அஃது ஏகதேசத்தையே `முற்று` எனக் கருதுவதாகவே முடியும்.
Special Remark:
`ஆறு, ஒன்று, ஐந்து` என்பன அவ்வெண்களையே குறித்தன. அதனால், ஏழன் உருபு பெறாது, மூன்றன் உருபு பெற்றது. பிராசாத கலைகள் பலவாவன பஞ்ச கலை, அட்ட கலை, தச கலை, சதுர்த்த கலை முதலியன. அவைகளையெல்லாம் பிராசாத நூல்களில் காண்க. அவை அங்ஙனமாயினும் துவாதச கலையும், சோடச கலையுமே சிறப்புடையனவாகப் பயிலப்படற்குரியன என்றற்கு, ``பன்னிரண்டில் அடங்கும்`` என்றும், `பதினேழாகிய அந்தம்` என்றும் கூறினார். கலைகட்கு அடக்கம் கூறினமையால் பன்னிரண்டு என்றும் மேற்போதல் கூறினமையால், `பதினாறைக் கடந்த பதினேழ்` என்றும் கூறினார். இப்பிராசாதங்களைப் பற்றி இத்தந்திரத்திலும், மூன்றாம் தந்திரத்திலும் சிறிது விளங்கக் கூறினோம்.
``ஓர் அந்தம்`` என்றது, `ஏகதேச அந்தம்` என்றபடி.
இதனால், ஆறந்தங்களில் ஒன்றாகிய நாதாந்தத்தின் நிலை கூறப்பட்டது.