ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

English Meaning:
Tantra, Mantra Upadesa

Beginningless are Agama Vedas
Tantra is to act their way,
Mantras are of the mind and beyond the body;
Upadesa is the teaching of Siva-Jnana.
Tamil Meaning:
அநாதியே உள்ளவனால் செய்யப்பட்டமையின், `அநாதி நூல்` எனப்படுகின்ற ஆகமங்களையும், வேதங்களையும் ஓதி, ஐயம் திரிபு அற உணர்தல் மந்திரகலாந்தம். ஏனைப் பாசுபதம் முதலிய தந்திரங்களை அவ்வாறு உணர்தல் தந்திர கலாந்தம். அவ்வாறு உணரப் பட்ட அந்நூல்களில் கண்டவாறு ஒழுகும் ஒழுக்கத்தில் மேம்படுதல் தெளிவுக் கலாந்தம். திருவைந்தெழுத்தைத் தத்தமக்கு உரியமுறையில் மனம் முதலிய அந்தக் கரணங்களால் அன்றி, அறிவால் சுத்தமான -தாகப் பெரிய அளவில் கணித்தல் ஞான கலாந்தம். குரு உபதேசத்தை நன்கு சிந்தித்துத் தெரிந்தபின் நிட்டையில் நிற்றல் உபதேச கலாந்தமாம்.
Special Remark:
உபதேசகலை மட்டிலே, `குரு உபதேசம்` எனக் கூறினமை பற்றி, `ஏனைய கலைகள் குரு இன்றியும் உணரப்படும்` எனக்கொள்ளலாகாது. ஏனெனில், `உபதேசம்` என்றது ஞானோப -தேசத்தையேயாகலின், அவ்விடத்து, `குரு` எனப்பட்டோரும் ஞான குருவே. ஞான குருவைக் கூறியது ஏனைக் குருமாரை விலக்கிய -தாகாது. பிறரெல்லாம் வித்தியா குரவரும், கிரியா குரவரும் ஆவர் என்க.
`அனாதி ஆகும் கலை` என மாறிக் கூட்டுக. ஆகும் அத்தந்திரம் - வேதாகமங்கட்குப் பின்னிலையினவாகிய அந்தத் தந்திரங்கள் ஆகும். மனாதி - மந்திரங்களைக் கணித்தற்குக் கருவி யாகும் மனம் முதலியன. உடல் - கருவி. ஈற்றில் உள்ள `ஆகும்` என்பதை வேதம் முதலிய எல்லாவற்றோடும் கூட்டுக.
இவ்விரண்டு மந்திரங்களாலும் கலாந்தம் வேறுவகையால் அமைதல் கூறப்பட்டது. மந்திர கலாந்தம் கொண்டவர் தருக்க மதத்தவர். தந்திர கலாந்தம் கொண்டவர் அகப்புறச் சமயிகள். தெளிவுக் கலாந்தம் கொண்டவர் பௌராணிகர். ஞான கலாந்தம் கொண்டவர் அகச்சமயிகளில் ஒருசாரார். உபதேச கலாந்தம் கொண்டவரே சித்தாந்த சைவர்.