ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

நித்தம் பரனோ டுயிர்உற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்து தத்துவம் தான்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்(து)
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

English Meaning:
Truth of Siddhanta

Daily living in Para`s thought,
Freed from Tattvas
Beginning with the Five (Sound, taste, smell, touch and sight);
Contemplating beyond
Where the Suddha and Asuddha (Mayas) pursue not,
Reaching thus Para that is Lord,
That, verily, is the Truth of Siddhanta.
Tamil Meaning:
`பரனே யன்றிச் சீவனும் அவன் போலவே என்றும் உள்ள அனாதி நித்தப்பொருள்` என்னும் கொள்கையை முதலிற் கொண்டு, (சீவன் அனாதியே பந்தப்பட்டு நிற்றலாம்), அது சுத்த மாயை, அசுத்தமாயை இரண்டும் பின்னர் வந்து பற்றாதவாறு விலகுதற்குரிய வழியை அறிந்து, அவ்வழியால் பந்தத்தினின்றும் நீங்கி, தந்தையாகிய சிவனை அடைதலே `சித்தாந்தம்` என்னும் தத்துவமாகும்.
Special Remark:
`வேதாந்தம்` என்னும் தத்துவமும் அதுதான் என்பது. முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அமைந்தது. `பரனோடு உயிர் நித்தம் ஆதலை உற்று` என்க. ``சத்த முதல் ஐந்து`` என்பது ஆகுபெயராய் அவற்றை அறியும் செவி முதலிய ஐந்து பொறிகளை குறித்தது. இதனானே உபலக்கணத்தால் அனைத்துக் கருவிகளும் கொள்ளப் படும். ``தத்துவம்`` என்றது, `கருவி` என்றவாறு. `மாயை தொடரா வகை` என்றது. `பிறவி தொடரா வகை` என்றதாம்.
இதனால், `சக சீவ பரங்களில் முதல் இரண்டும் நித்தப் பொருள்களே` என்பதே சித்தாந்தம் எனக்கூறி, இக்கொள்கையே வேதாந்தம்` என்றமையால், `பரம் ஒன்றே நித்தம்` என்பது வேதாந்தம் ஆகாமையும் கூறப்பட்டது. எனவே ஆறந்தங்களுள் இங்கு சித்தாந்தம் கூறப்பட்டதாம், வேதாந்தம் இதன்கண் அடங்கிற்று.
சகம் - பிரபஞ்சம். காரியப் பிரபஞ்சம் அநித்தம் ஆதலின், முதலிரண்டு மட்டுமே இங்கு `நித்தம்` எனக் கூறப்பட்டன.