ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை
அயர்வற்ற றறிதொந்தத் தசியெ னதனால்
செயலற் றறிவாகி யும்சென் றடங்கி
அயர்வற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆமே.

English Meaning:
Tvam-Tat-Asi State is Goal of Vedanta Siddhanta

Jiva, Para and Siva—the States Exalted
Continuous know;
You then reach the State, Tvam-Tat-Asi;
There, actionless are you;
All Jnana are you;
Thus be merged;
—So says Vedanta-Siddhanta.
Tamil Meaning:
`உயிர், பரன், திருவருள்` என்னும் முப்பொருளை யும், `அவற்றுள் ஒன்றையும் விடாது முறையே உணர்த்துகின்ற, `துவம், தத், அசி` என்னும் மூன்று பதங்களால் ஆகிய வேதாந்த மகா வாக்கியத்தை அனுபவமாக உணர்வதால், நீ சடமாகிய பாசங்கள் ஆகாது, சித்தாகி விடுவாய். ஆயினும், அதன்பின் `யான் எதனையும் யானே அறியமாட்டாமையால், தூலசித்தாகின்ற எனக்கு எஞ் ஞான்றும் அறிவித்து வருகின்ற சூக்கும சித்து ஒன்று உண்டு என உணர்ந்து, எதனையும், `யான் அறிகின்றேன், யான் செய்கின்றேன்` எனச் செருக்குதலை விடுத்து, அந்தச் சூக்கும சித்தின்கீழ்ப் போய் அடங்கியிரு. அப்பொழுதே வேதாந்தம் சித்தாந்தம் ஆகிவிடும்.
Special Remark:
சிவன், அவனது அருளைக் குறித்த ஆகுபெயர். வாக்கியம், `தத்துவமசி` என்று இருப்பினும் உண்மையில் அதன் சொற்கிடக்கை முறை, `துவம் தத் அசி` என்பதே ஆதலை விளக்குவார். `தொம் தத் அசி` என்றார். `அசி` என்பது, `ஆகின்றாய்` எனப் பயனிலை ஆதலாலும் அது முன்னிலையிடத்தது ஆதலாலும் `துவம்` (நீ) என்னும் முன்னிலை எழுவாய் முதற்கண் நிற்றலே முறையாதல் அறிக. எனவே, `தத்துவமசி` என்ற மகாவாக்கியத்தின் பொருள், `நீ அது ஆகின்றாய்` என்பதே ஆகின்றது.
ஒரு பொருள் மற்றொரு பொருளேயாதற்குக் காரணம் அவற்றிடையே யுள்ள இயைபு. அவ்வியைபுதான் பல. `குடம் மண் ஆகின்றது` என்பதில் ஆதற்குக் காரணம் காரிய காரண இயைபு. அது போன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் பிரம பரிணாமவாதிகள்.
`வெண்மை தாமரை யாகின்றது`, `இலை பூ காய்கள் மரமாகின்றன` என்பவற்றில் ஆதற்குக் காரணம் குண குணி, இயைபும், அவயவ அவயவி இயைபும் ஆகும். இவைபோன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் விசிட்டாத்து விதிகள்.
`பாம்பு பழுதையாகின்றது`, `அரசன் ஆண்டியாகின்றான்` `குடாகாயம் மகாகாயம் ஆகின்றது` என்பவற்றில் ஆதற்குக் காரணம் காட்சிவகையும், நிலைமை வகையும், பொருள் ஒருமை வகையும் ஆகும். இவைபோன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணமும் என்பர் கேவலாத்து விதிகள்.
இவரெல்லாம், `வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு, வேறு` எனப் பேதம் கூறுபவரும், சித்தாந்தத்தை ஏனையோர் கூறும் வேதாந்தம் ஆக்குபவரும் ஆவர். அவர்களையெல்லாம் மறுத்து, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம், ``நான் இவள்ஆம் பகுதிப் பொற்பு``* என்று அருளிச்செய்தபடி, `தலைவன் தலைவி ஆகின்றான்` என்பதில் ஆதற்குக் காரணம், தலைவனது உணர்வு தன்னை உணரும் உணர்வாகாது, தலைவி தன் நலத்தையே உணரும் உணர்வாதலாம் அது போன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் எனச் சித்தாந்தம் கூறுவார், ``அறிவாகியும் சென்று அடங்கி`` என்றார். ``தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றன்னை``* என்பதில், ``என் -றன்னை`` என்றதும், ``என்னை விழுங்கி வெறுந் - தானாய் நிலை நின்றது தற்பரமே``l என்பதில் ``என்னை`` என்றதும் உயிருணர்வையே -யாம். இவற்றில், ``கொண்டது`` எனவும், ``விழுங்கி`` எனவும் கூறப் பட்டதே இங்கு, ``அடங்கி`` எனக்கூறப்பட்டது. `அடங்குதி` என்னும் இகர ஈற்று ஏவல் வினை தகரம்பெறாது நின்றது, ``நன்றுமன் இது நீ நாடாய் கூறி``8 என்பதிற்போல.
``அறி`` என்பது, `தொந்தத்தசி` என ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றதனோடு வினைத்தொகைபடத் தொக்கது. அயர்வு - அறியாமையால் கொள்ளாதொழிதல்.
இதனால், முன் மந்திரத்தில் கொள்வகையால் விளக்கிய உண்மை, சொற்பொருள் வகையால் விளக்கப்பட்டது.