ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

English Meaning:
Jivan Mukti in Siddhanta

In Siddhanta is attained
Jivan Mukti (Liberation in this body);
Those who stood in Siddhanta
Have verily reached the Mukti State;
As Siddhanta-Vedanta
Leads to the Goal of Siva-Becoming,
Siddhanta-Vedanta
Is the Path Exalted.
Tamil Meaning:
ஆறந்தங்களுள் சித்தாந்தத்தில் நிற்கும் நிலையில் தான் சீவன் முத்தி (அஃதாவது, உடம்பு உள்ளபொழுதே அதில் தொடக்கற்று, வீட்டின்பத்தில் இருக்கும்நிலை) கிடைக்கும். ஆகையால், சித்தாந்த நிலையில் நிற்பவர் உலகர்போலவே காணப் படினும், அவர் உலகருள் ஒருவராகாது, வீடுபேற்றில் இருப்பவரே ஆவார். வேதாந்தத்தின் உட்கிடையும் சித்தாந்தமேயாதலால், அவ்வுட்கிடையை உணரவல்லவர்கட்கு வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் சிவனையே பரமாகக் காட்டி நிற்றல் விளங்கும்.
Special Remark:
``சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனம்ஒன்றி லேசீவன் முத்த ராக்கி
வைத்தாண்டு மலம்கழுவி ஞான வாரி
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர்; இது என்ன பிராந்தி!`` -பக்கம் - சூ. 8 - 16.
என்னும் சிவஞான சித்தி மொழியினை இங்கு ஒப்புநோக்கியுணர்க.
இதனால், ஆறந்தங்களுள் சித்தாந்தத்தின் தலைமை அதன் பயன்கூறும் முகத்தால் இனிது விளக்கப்பட்டது.