ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

தேடும் இயம நியமாதி சென்றகன்(று)
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

English Meaning:
Yoganta State

Seeking Yama and Niyama
And then going beyond
Enter into Samadhi;
There Jiva reaches Para Siva;
And Param becoming
All desires abandoned,
Realizes Upasanta
That verily is the Truth of Yoganta.
Tamil Meaning:
இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களையும் மேற்கொள்ளப் புகுந்து, அவ்வாறே படிமுறையால் மேல் ஏறி, முடிவான `சமாதி` என்னும் நிலையை எய்திச் சிவனுக்கு அணுக்கமாகி நிற்கச் சீவன் சிவனாய்விடும். அந்நிலையில் உலகத்தாக்கம் ஒழிய ஓர் அமைதி நிலை தோன்றும். அதுவே உயிர் பெறத்தக்க பேறு - என்னும் இதுவே யோக நூலின் முடிவான கொள்கை.
Special Remark:
இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களின் இயல்பை மூன்றாம் தந்திரத்தில் காண்க. `இயமத்தில் தொடங்கி முறையே வளர்ந்து ஏழாவது உறுப்பாகிய தியானத்தை அடைதலே ஞானத்தின் முடிநிலை` என்பதும், `அதன்பின் சமாதியை அடைதலே ஞானத்தின் பயன்` என்பதும், `அதனை அடைந்தோர் உடம்பு நீங்கிய பின் பரம் பொருளோடு ஒன்றாகி விடுவர்` என்பதும் யோகநூற்கொள்கை என்றபடி. `உடம்பு நீங்குதலின்ற, என்றும் நிலைத்திருக்கப் பெறுதலே முத்தி` என்னும் கொள்கையும் உண்டு.
ஊடுதல் - உட்புகுதல். `ஊடுறும்` என்பது குறைந்து நின்றது என்றலும் ஆம். `சிவனுக்கு அணியராதல் சமாதியின் தொடக்கநிலை` என்க. `உபசாந்தம் கூடும்` எனமாற்றியுரைக்க.
இதனால், ஆறந்தங்களுள் யோகாந்தம் கூறப்பட்டது. இக்கொள்கையுடையோர் யோகமதத்தினர். இவர் முதல் ஆசிரியர் பெயர்பற்றி, `பாதஞ்சலர்` எனவும் கூறப்படுவர்.