ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

பரானந்தி மன்னும் சிவானந்த மெல்லாம்
பரானந்தி மேன்மூன்றும் பாழுறா னந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்ந்நட னானந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

English Meaning:
Beyond Bliss of Voids is the Bliss of Siva Dance

All transcendental states of bliss
That Jiva experiences
Are, alike, Siva-bliss (Sivanandam);
The Three Higher States of Transcendental Bliss
Are States that come out the three Voids;
The Bliss that comes of Mudras appropriate
Is the Bliss of Siva`s Dance within;
It is the State that fills Soul in rapture.
Tamil Meaning:
வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த நெறியில் அடையப்படும் ஆனந்தம் சிவானந்தம். அதனை முற்றப்பெற்ற உயிரே மேலான ஆனந்தத்தைப் பெற்ற உயிராகும். இனி அந்த ஆனந்தம் முப் பாழுக்கு மேலே விளைவதாகும். அதனை இவ்வுலகிலே இறைவன் செய்யும் திருக்கூத்திலும் பெறலாம். திருக்கூத்தில் பெறும் `முத்திரானந்தம், எனப்படும். அதனை எல்லாரும் பெறுதல் கூடும். சிவானந்தத்தை எந்த வகையிலேனும் பெறும் உயிரே இன்பத்தால் நிறைக்கப்பட்ட உயிராகும்.
Special Remark:
பர + ஆனந்தம் = பரானந்தம். `பரா + ஆனந்தம்` என்றலும் ஆம். ஆனந்தத்தை உடையது ஆனந்தி. ``பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்`` என்றாரேனும், `சிவானந்தம் எல்லாம் மன்னியது பரானந்தி` என்றலே கருத்து. எல்லாம் - முழுதும். `முழுதிலும்` என்க. மன்னுதல் - நிலைத்திருத்தல். இரண்டாம் அடியில், `அந்தப் பரானந்தம்` எனச்சுட்டியுரைக்க. ``மேல்மூன்றும் பாழ்உறு ஆனந்தம்`` என்பதை, `மூன்று பாழுக்கும் மேல் உறு ஆனந்தம்` என மாறிக்கூட்டுக. `முப்பாழ்இவை` என்பதைப் பின்னர்க்காண்க. விரா ஆனந்தம், வினைத்தொகை. ``விரா`` என்றது உடம்பொடு புணர்த்தது. எனவே, `முத்திரானந்தம் (யாவராலும்) விராவப்படும்` என்பது கருத்தாயிற்று. கூத்தப்பெருமானது கூத்து, ``ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தலையே``l குறிப்பதாகலின், அந்த நடனத்தில் காணப்படும் முத்திரை (வீசியகரமும், எடுத்த திருவடியும்) `ஆனந்த முத்திரை` யாகும். அதனால் அதை, ``முத்திரானந்தம்`` என்றார். முத்திரானந்தம் - முத்திரையில் விளையும் ஆனந்தம்.
`இறைவன் இல்லை` எனப் பிணங்கிய தாருகாவன முனிவர்க்கு `அவன் உளன்` என விளக்கினமையால், பிட்சாடனர் கையில் காணப்படுவது `சன்முத்திரை` சன் + முத்திரை (சத் + முத்திரை) என்றும், சனகாதி நால்வர்க்கு ஞானத்தைத் தெளிவித் தமையால், தென்முகக் கடவுள் கையில்காணப்படுவது `சின்முத்திரை` (சித் + முத்திரை) என்றம் சொல்லப்படும். எனவே இம்மூர்த்திகளின் முத்திரையும் கூடி, சச்சிதானந்த முத்திரையாதல் விளங்கும்.
`பொரு` என்னும் பகுதி நேரே, `போர் செய்தல்` எனப்பொருள் தருமாயினும், உகரம் பெற்று, `பொருவுதல்` என நின்று `ஒத்தல்` என்றும் பொருளைத் தரும் ஆதலின் இங்கு, ``பொராநின்ற`` என்பது, `ஒத்திரா நின்ற` எனப்பொருள்தத்தது. ஒத்திருத்தல் - தகுதி பெற்றிருத்தல். உள்ளம் - ஆன்மா. பூரித்தல் - நிறைத்தல். பூரிப்பி - நிறைக்கப் பட்டது.
இதனால், சித்தாந்தத்தில் பெறப்படும் பயன் ஒப்புயர் வற்றதாதல் கூறப்பட்டது.