ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையாம்
பொய்கண்ட மாயேயந் தானும் புருடன்கண்(டு)
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.

English Meaning:
State of Suddha Avasta (Pure-Impure)

Penetrating it,
Futher beyond In the State of Par-Avasta, (Pure Experience)
The limited sphere of Tattvas
Five times Five,
And Maya Impure,
—Unreal are they;
Leaving them,
Let Jiva ascend
Into the Sphere of Mamaya (Pure Experience)
That is Pure (Suddha);
There the Soul is All-Existence
And Non-Existence at once.
Tamil Meaning:
`இருபத்தைந்து` எனத் தொகை பெற்று நிற்கின்ற தத்துவங்களாய் உள்ள மூலப் பிரகிருதியில் இயல்பையும், `மாயேயம்` எனப்படுகின்ற வித்தியா தத்துவங்களாய் உள்ள அசுத்தமாயையின் இயல்பையும் சாதகன் உள்ளவாறு உணர்ந்து தத்துவ ஞானியாய், எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாகியும், பொருள் தன்மையால் வேறாகியும் நிற்கின்ற சிவமாகிப் பிறவியினின்றும் நீங்கி நிற்கும் பராவத்தையை அடைதலே உண்மைச் சுத்தாவத்தையாகும்.
Special Remark:
`பொய்கண்ட` என்பது தாப்பிசையாய் `ஐயைந்து` என்றதனோடும் சென்றியைந்தது. பொய்கண்ட - நிலையாமை நன்கு உணரப்பட்ட. இங்கும் `மாயேயம்` என்பது, `மாமாயை` எனப்பாடம் திரிக்கப்பட்டுள்ளது. `மாயையாம் மாயேயம்` என்றாராயினும், `மாயேயமாம் மாயை` என மாறிக் கூட்டுக. தான், அசை, எய்தல் - அறிதல், படி - வகை. இஃது ஆகுபெயராய், `படியன்` எனப் பொருள் தந்தது. `சிவமாந் தன்மையைப் பெற்ற ஆன்மாவும் சிவம்போலவே வியாபகமாய் நிற்கும்` என்பார். ``எவற்றுமாய் அன்றாகி`` என்றார். ``எவற்றுமாய்`` என்றது, `எவற்றிலும் அவையேயாய்` என்றபடி.
இதனால், பராவத்தையை எய்துமாறும், `பராவத்தையே பிறவாநிலை` என்பதும், `அஃதே உண்மைச் சுத்தாவத்தை` என்பதும் கூறப்பட்டன.