ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

சத்தி பராற்பரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்தி அம் மாயை தனுட்சக்தி ஐந்துடன்
சத்தி பெறும்உயிர்தான் அங்குற் றாறுமே.

English Meaning:
Saktis are Dynamic Aspects of Static Parapara

Sakti in Parapara is Para Sakti;
Sakti in Santhi is Chit Sakti;
Sakti in Paranand is Iccha Sakti;
Sakti in Iuminous Bindu is Jnana Sakti;
Sakti in Maya is Kriya Sakti;
When Jiva These Saktis receive,
Then it reposes integral in the Divine.
Tamil Meaning:
(குண குணிகட்குத் தம்முன் வேற்றுமை யின்மையால்,) `சத்தியே சிவம்` என்று கூறலாம். எனினும், சத்தியை ஆள்வது பொருளேயாதலின், சிவத்தினின்றே சத்தி தோன்றுகின்றது. (அஃதாவது செயற்படுகின்றது.) அதனால் உயிர்கட்கு, அமைதியைத் தருவதும், மேலான ஆனந்தமாய் விளைவதும் பராசத்தியே. இனி அந்தச் சத்தியினால் தான் சுத்தமாயையாகிய சத்தி காரியப்படுகின்றது. அது காரியப்படும் நிலையில் சிவசத்தி, `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` என ஐந்தாய் இருக்கும். அந்த ஐந்துடனும் கூடுவதனாலே தான் உயிர் ஆற்றலைப் பெறுகின்றது. ஆகவே, உயிர் அமைதியை அடைந்து, ஆனந்தத்தைப் பெறுவது பரையாகிய சத்தியிடத்தில்தான்.
Special Remark:
`சத்தியேபராற்பரம்` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. பராற் பரம் - மேலானவற்றிற்கெல்லாம் மேலானது; `தனில் ஆன சத்தி சாந்தி; பரானந்தம்` எனவும், `தன்னில் விந்து சத்தி சுடர்` எனவும் கொண்டு கூட்டுக. விந்துவின் (சுத்த மாயையின்) சத்தி, மோகினியின் (அசுத்த மாயையின்) சத்திபோல மயக்குதலைச் செய்யாது, தெளிவைச் செய்தலின் அதன் சத்திகாரியப் படுதலை `சுடர்தல்` என்றார். சுடர், முதனிலைத் தொழிற்பெயர். `சுடர்தல் நிகழும்` எனப் பயனிலையும் `உடன்` என்பதன்பின், `கூடி` என்னும் சொல்லெச்சமும் `உயிர்` என்பதன்பின் `ஆகலின்` என்னும் சொல்லெச்சமும் வருவிக்க. ஆறும் - சாந்தி யடையும். ஆகவே, ஆனந்தத்தை அடைதல் சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `பராவத்தையாவது உயிர்பராசத்தியைப் பொருந்தி நிற்றல்` என்பதும், `அவ்விடத்து அதற்கு அமைதியும், அதன் வழியாக ஆனந்தத்தையும் பராசத்திதரும் என்பதும் தெரித்துக் கூறப்பட்டன.