ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

சீவன் துரியம் முதலாகச் சீராக
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்(து)
ஓவும் பரானந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.

English Meaning:
Beyond the Ten Avastas in Jiva Turiya, Para Turiya and
Siva Turiya is the Eleventh State of Consciousness of Para Nandi (Siva)

Thus Jiva, who has Para become,
From Jiva Turiya onward
Up to Siva Turiya,
Ten avasstes (States) experiences;
Then enters the State Eleventh
Where he merges into Truth of Para Nandi (Siva)
And finally goes beyond,
All eleven States thus ensured.
Tamil Meaning:
`சிவதுரியம்` எனப்படுவது, யோகாவத்தையில் இமயம் முதலிய எட்டில் ஏழாவதாகிய `தியானம்` என்பது. `சிவ துரியம்` எனப்படுவது, தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய சிவயோகம். இவ்வொன்பதில் ஆன்ம சுத்தி சிவ தரிசன சிவயோகங்களில் அடங்கிவிடுதலால், எஞ்சிய எட்டோடு, யோகாவத்தையில் `தியானம் சமாதி` - என்னும் இரண்டைக் கூட்ட, சீவதுரியம் முதலாகச் சிவ துரியம் ஈறாக உள்ள அவத்தைகள் பத்தாம். ஆகவே, இந்தப் பத்த வத்தைகளையும் கடந்து, சிவானந்தந் தருவதாகிய உண்மைச் சுத்தா வத்தை அடைந்தவனே, தான் முன்பு கட்டுண்டிருந்த அனைத்துத் தத்துவங்களினின்றும் நீங்கினவனாவன்.
Special Remark:
`மேலாலவத்தை` எனப்படுதலால் யோகாவத்தையில் நிகழும் துரியம் சகலத்திற் சுத்தமே யாகையால், அது சீவ துரியமாம். எவ்வாறெனில், சகலத்தில் நிற்கும் உயிரே சிவன் ஆகலின். இனி- ஞானாவத்தையும் சகலத்தில் சுத்தமாயினும் அது ஞான குருவின் அருளால் ஞானத்தைப் பெற்றபின் அதனை முற்றுவிக்கும் நிலை யாதலின் அதன்கண் நிகழும் துரியம் சிவதுரியமாம். தசகாரியத் துள்ளும் `சிவயோகம்` என்றே சொல்லப்படுதல் நினைக்கத் தக்கது. என்னும், உண்மைச் சுத்தாவத்தையாகிய முத்தி வகைகளே பரா வத்தை யாதலின், அதன்கண் நிகழும் துரியம் பர துரியமாம். அதன் பின் நிகழும் அதீதமே சாயுச்சிய முத்தியாகலின், அந்நிலையில் விளையும் ஆனந்தமே முடிநிலைப் பேரானந்தம் ஆதலின் அது பரானந்தமாகும். பரானந்தத்தை அடைந்தவன் பரானந்தி. உண்மைச் சுத்தத்தை, உண்மை` என்றும், `அனைத்துத் தத்துவங்களும்` எனக் கூற வந்தவர் அதனை வேதாந்திகளும் உணரும் வகையில், `மேவிய நாலேழ்விடுத்து நின்றான்` என்றும் கூறினார். `அந்தம்` என்பதன் பின்னும் ஆக்கம் வருவித்து, `சீவன் துரியம் முதலாகச் சிவன் துரியம் அந்தமாகச் சீராக ஆவ அவத்தை பத்து` என முடிக்க.
இதனால், யோகாவத்தை, தசகாரியம் இவற்றை வைத்து நோக்கின், சுத்தாவத்தைகள் பலவாதல் கூறப்பட்டது.