ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

ஆறாறுக் கப்பால் அறி(வு)ஆர் அறிபவர்
ஆறாறுக் கப்பால் அருள் ஆர் பெறுபவர்
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரன்இனி தாமே.

English Meaning:
Beyond Tattvas is Divine Bliss

They who know Him
Beyond the Tattvas six times six
Truly know Him;
Beyond the Tattvas six times six
They receive His Grace;
They who have Knowledge True
Beyond the Tattvas six times six
Only to them, is He the Divine Bliss;
He the Hara
That is beyond the Tattvas,
Six times six.
Tamil Meaning:
முப்பத்தாறு தத்துவங்களும் சடமேயாதலின் சித்தாகிய பரம்பொருள் அத்தத்துவங்கள் அனைத்திற்கும் அப்பாற் பட்டதாம். (அந்தப் பரம் பொருளை யடைதலே பராவத்தை) இந்தச் சடசித்துக்களைப் பகுத்து, சித்தின் இயல்பை அறிபவரும் அரியர். அந்தச் சித்துப் பொருளின் குணமே அருள் ஆதலின், அப்பொருளை அறிந்து அருளைப் பெறுபவரும் அரியர். உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது. ஆகலின், அறிவே வடிவான பரம் பொருளைச் சார்ந்து அறிவே வடிவாய்விட்ட அவர்கட்குத்தான் சிவன் அளவிலா இன்பப் பொருளாய் இன்புறுத்துவான்.
Special Remark:
இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது. இனிச் சொற்பின்வருநிலையணி பெற்றதாகக் கொண்டு. `ஆறு` என்பவற்றிற்கு வேறு வேறு பொருள் உரைப்பாரும் உளர். `இனிது` என்றது, `இன்பப் பொருள்` என்றதாம். இனி இதனை வினையெச்சக் குறிப்பாகக் கொண்டு, `நன்கு விளங்குவான்` என உரைப்பினும் ஆம்.
இதனால், `பராவத்தை அறிவு, அருள், ஆனந்த மயமானது` என்பதும், `அதனால், அதனை மடமை, வன்கண்மை, துக்கமயமாகி நிற்பவர் அடைதல் அரிது` என்பதும் கூறப்பட்டன.