ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

பரமாம் ஆதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் ஆதீதம் பயிலப் பயிலப்
பரமாம் ஆதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.

English Meaning:
In Para-atita Turiya State Jiva Becomes Beyond Param

In desire bereft of desires,
As Jiva aspires to Para-atita-turiya State
And steadfast perseveres in it,
He becomes Beyond-Param (Siva);
The tapasvins who practise not
Will never Param become;
They are forever fettered
In Pasas several.
Tamil Meaning:
`பராவத்தையிலும் அதன் முடிநிலையாகிய அதீதத்தை அடைதல் வேண்டும்` எனக் கூறுதல், சிறிதே எஞ்சி நிற்கும் மலவாசனை நீங்குதற் பொருட்டாம். (வாசனை, `இலய மலவாசனை` என்க.) இனி அந்த அதீதத்தைத் தலைப்பட்ட பின்பும் விடாது தொடர்ந்து அதிற்றானே பழகிப் பழகியிருந்தால்தான், ஆன்மாச் சிவமாம் தன்மையைப் பெறும். ஆகவே, அதில் அவ்வாறு தொடர்ந்து பழகா தவர்கள் எத்துணைச் சாதகங்களைச் செய்தவராயினும் அவர் சிவமாம் தன்மையை அடையார். அத்தன்மையை அடையாமையால், சிறிதளவு எஞ்சி நின்ற பாசமும் நீங்காமல் இருந்துக் கொண்டேயிருக்கும்.
Special Remark:
`அவ் இருப்பு எல்லையில் இன்பத்திற்குத் தடையாகும்` என்பது கருத்து. ``பற்றறப் பற்ற`` - என்பதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரை கூறப்பட்டது.
``பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு``l
எனத் திருவள்ளுவரும்,
``பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றில், அப்
பற்றை அறுபர்என் றுந்தீபற``3
எனத் திருவுந்தியார் ஆசிரியரும் அருளிச் செய்தமை காண்க.
இன்னும் திருவுந்தியார் ஆசிரியர்,
``பழக்கந் தவிரப் பழகுவ தன்றி,
உழப்புவ தென்பெண்ணே, உந்திபற;
ஒருபொரு ளாலேயென் றுந்திபற``*
என்றமையும் அறியற்பாற்று. பாசம் - பாச வாசனை. ஒன்று - சிறிது, அஃது அவ்வளவிற்றாகிய பாச வாசனையைக் குறித்தது. `ஒன்றும்` என உம்மை விரிப்பின், அது நின்மலாவத்தையைப் பயனிலதாகச் செய்தல் உணர்க. ``பற்று`` என்றதை, `குறிகளும் அடையாளமும் கோயிலும்`3 ஆக உரைததாரும் உளர்.
இதனால். பராவத்தையிலும் அதீதம் இன்றியமையாதாதல் கூறப்பட்டது.