ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்(கு)
உரிய வினைகள்நின்(று) ஓலமிட் டன்றே.

English Meaning:
From Turiya to Turiyatita

The Jiva was in Turiya State;
Like a swift steed
Was into the Turiyatita Jagrat State led;
The Master
Thus had the (Karmic) jackals chased away;
And the Karmas stood howling,
Disappointed sore.
Tamil Meaning:
பர துரியமாகிய குதிரைமேல் ஏறிய ஆன்மா, அதனை விடுத்து, அதற்குமேல் உள்ள அதீதமாகிய புலிக்குள் தன்னைப் புகவிடுமாயின், புலியால் கௌவிக் கொள்ளப்பட்ட ஆட்டினை நரிகள் பற்ற மாட்டாது அஞ்சி ஒடிவிடுதல் போல, அந்த ஆன்மாவை மாயாகாரியங்களாகிய தத்துவங்கள் அணுகமாட்டாது நீங்கிவிடும். (அஃதாவது, `செயல் இழந்துவிடும்` என்பதாம்) மாயா கருவிகள் நீங்கினமையால் பிராரத்த கன்மம் வந்து பற்றமாட்டாது ஒழியும்.
Special Remark:
`விசாக்கிரம், வியாக்கிரம்` என்னும் சொல் ஒற்றுமைப் பற்றி பராவத்தையில் முடிவான அதீதத்தைப் புலியாக உருவகிக் கின்றவர், அதற்கேற்பத் தத்துவங்களை நரிகளாக உருவகித்தார். அத னானே ஆன்மா ஆடாக உருவகிக்கப்பட்டதும் விளங்கும். `ஆட்டை உண்பன நரியும், புலியும் ஆயினும், புலிபற்றிக் கொண்ட ஆட்டினை நரி அணுகமாட்டாது. அதுபோல ஆன்மாவை உட் கொள்வன மாயா கருவிகளும், சிவமும். ஆயினும் சிவத்தால் பற்றிக் கொள்ளப்பட்ட ஆன்மாவை மாயா கருவிகள் அணுக மாட்டா` என்பது நயம்.
நாதர் - தலைவர். இங்கு, ஞானத்தலைவர். உரியவினை, முகந்து கொண்ட பிராரத்த வினை. ஓலமிடுதல் - அஞ்சி, தீங்கு செய்யாதிருக்கும்படி முறையிடுதல். `ஓலமிட்டன்று` என்றது, `ஈயென இரத்தல் இழிந்தன்று`* என்பது போல, `ஓலமிட்டது` என்பதாம். இது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், பர துரியாதீதத்தை அடைந்த ஆன்மாவை மாயை கன்மங்கள் தொடராமை கூறப்பட்டது.