
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

ஆறா றகன்று நமவிட் டறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.
English Meaning:
Knowledge of Siva, Sakti and Jiva [(Si-Va-Ya)] is LiberationTranscending Tattvas
Six times six,
Abandoning
The letters ``Na`` and ``Ma``
Knowledge Becoming,
Jiva thus liberated rises,
As letter ``Ya;``
Merging in letter ``Va`` denoting Sakti
And in letter ``Si`` denoting Siva
Jiva (``Ya``) becomes Si Va Ya
That Mukti is.
Tamil Meaning:
பெத்தம், முத்தி இரண்டும் சிவன் செயலே யாகலின் அது பற்றி அவையிரண்டும் முறையே, `ஊனநடனம், ஞான நடனம்` எனப்படும். ஊன நடனத்தில் சிவனது சத்திதிரோதான சத்தியாயும், ஞானநடனத்தில் சிவனது சத்தி அருட்சத்தியாயும் செயற்படும். சிவசத்தி பொருளால் ஒன்றேயாயினும், செயல் பற்றி இவ்வாறு இரண்டாக வகுத்து விளக்கப்படுகின்றது. திரோதான சத்தி மறைத்தலையும், அருட் சத்தி அருளலையும் செய்யும்.உமாபதி தேவர், திருவைந்தெழுத்தை `நமசிவாய` எனத் தூலமாகக் கொண்டாலும், `சிவாயநம` எனச் சூக்குமமாகக் கொண்டாலும்,
``ஊன நடனம் ஒருபால்; ஒருபால்ஆம்
ஞானநடம்; தான்நடுவே நாடு``l
என அருளிச் செய்தார். தான் - சீவன்; அல்லது ஆன்மா. `அது நடுவே உள்ளது` எனக் கூறப்பட்டமையால், யகாரம் பசு வெழுத்தாயிற்று.
`உண்மை விளக்க` - நூல் திருவைந்தெழுத்தை, `சிவாயநம` எனச் சூக்குமமாக எடுத்துக் கொண்டு,
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன் எழுத்து ஐந்தின் அடைவாம்``*
எனக் கூறிற்று. ஆகவே, `சிகாரம் சிவன்; வகாரம் அருட்சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதான சத்தி, மகாரம் ஆணவ மலம்` என்ற தாயிற்று. மாயை கன்மங்கள் ஆணவ மலம் போல உயிருக்கு இயற்கை யாகாது, திரோதான சத்தியாலே செயற்யைாகக் கூட்டப்பட்டு, ஆணவ மலத்தின் பரிபாகத்திற்குத் தக்கவாறு அந்தத் திரோதான சத்தியாலே செயற்படுத்தப்படுவதால், அவை வேறு நில்லாது, திரோதான சத்தியுள் அடங்குகின்றன. `மாதவச் சிவஞான யோகி கட்கும் இதுவே கருத்து` என்பது அவரது உரைகளால் விளங்கும். இஃது அறியாதார், `மகாரம் மாயையைக் குறிக்கும்` என்பர். `அவ்வாறாயின் மூல மலமாகிய ஆணவத்தைக் குறிப்பது எது` என அவர் நோக்காமை யறிக.
உமாபதி தேவரும் ஆன்மாவை நடுவாக வைத்து,
``திருவெழுத் தஞ்சில் ஆன்மாத், திரோதம், மாசு, அருள், சிவம்``l என முதலில் முன் உள்ள எழுத்து பாச எழுத்து இரண்டையும், பின்பு பின் உள்ள பதியெழுத்து எழுத்து இரண்டையும் குறித்தார். `முன், பின்` என்பவற்றைக் காலம் பற்றிக் கொள்ளாது. இடம் பற்றிக் கொள்க. இவற்றால், `ந, ம` என்பன பாச எழுத்துக் களும், `சி, வ` என்பன பதி எழுத்துக்களும் ஆயின. எனவே, முப்பொருள்களும் அஞ்செழுத்தில் அடங்குதலாலும், ``பலகலை ஆகமம், வேதம் யாவையினும் கருத்துப் பதி, பசு, பாசம் தெரித்தலே`` யாகலானும்,
``அஞ்செழுத்தே ஆகமமும், அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்அனைத்தும்``8
என உண்மை விளக்கத்திலும்,
``அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின்
பொருள்நூல் தெரியப் புகின்``3
எனத் திருவருட் பயனிலும் கூறப்பட்டன.
இவற்றால், `நகார மகாரங்கள் ஊன நடனம்` என்பதும், `சிகாரவகாரங்கள் ஞான நடனம்` என்பதும் விளங்கும்.
கீழாலவத்தை மத்தியாலவத்தை, மேலால் அவத்தைகளில் நிற்போர் தத்துவங்களின் நீங்காமையால் அவர்களில் பற்றுக்களை விட விரும்பாதவர் அஞ்செழுத்து மந்திரத்தைத் தூலமாக வைத்தும், பற்றுக்களை விட விரும்பினோர் அதனைச் சூக்குமமாக வைத்தும் கணித்தற்கு உரியர். அவற்றின் பயனாக ஞான குருவின் உப தேசத்தைப் பெற்றுப் பற்றுக்களை விட்டொழிக்க முயல்கின்றவர்கள் தத்துவங்களாகிய பாசங்கள் நீங்குதற்பொருட்டு அஞ்செழுத்துக்களில் பாச எழுத்துக்கள் இரண்டையும் நீக்கி, மற்றை மூன்றெழுத்தை மட்டுமே கணித்தற்கு உரியர். இதனை, `அதிசூக்கும பஞ்சாக்கரம்` என்பர். இந்நிலையில் பிரணவத்தைச் சேர்த்தல் கூடாது. பிரணவம் இன்றிச் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களைத் திரும்பத் திரும்பக் கணிக்குங்கால், யகாரம்வகாரத்திற்கும், சிகாரத்திற்கும் இடைப்பட்ட தாகிவிடும். ஆகவே, ஆன்மாவை எவ்வகையிலும் பாசங்கள் பற்றுதற்கு வழியில்லை, யகாரத்தைத் தொடர்ந்து சிகார வகாரங்கள் வர,பின்பு வகரத்தைத் தொடர்ந்து யகாரம் வருதலால், ``அடியேன் நடுவுண் இருவீரும் இருப்பதனால் ``* என்னும் திருவாசகத் தொடர் இதனையே குறிப்பதாகக் கூறுவர்.
சிவஞான போதஒன்பதாம் சூத்திரத்தில் மெய்கண்ட தேவர்.
``உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி``
எனக் கூறி, அதனையடுத்து ``எண்ணும் அஞ்செழுத்தே`` எனக் கூறியவர், அதனை வாளா கூறாது, `விதி எண்ணும் அஞ்செழுத்தே, எனக் கூறியருளினார். வார்த்திகத்திலும்.
``இவ்விடத்துச் சீபஞ்சாக்கரத்தை
விதிப்படி யுச்சரிக்க``
என்றார். `பாசம்ஒருவ` என முன்னே கூறினமையால், `விதிப்படி` என்றது, `பாச எழுத்துக்களை நீக்கிப் பிரணவமும் இல்லாமல் உச்சரித்தல் வேண்டும்` என்றதேயாகின்றது. வெளிப்படையாகவே அந்த மூன்றெழுத்து மந்திரத்தை அவர் எடுத்துக் கூறாமைக்குக் காரணம், `அவ்வாறு கூறுதல் மரபன்று` என்பதும், இன்னோரன்னவை யெல்லாம் குருமுகமாகவே அறிதற்குரியன` என்பதுமேயாம். ஆயினும் காலப்போக்கில் அவரது பொருளை உணர்ந்து பயன் பெறு பவர்கள் அருகி மாறுபட்ட கருத்துக்கள் மலிந்து வருதலால், இவ் விடத்து எடுத்துக் காட்ட வேண்டி வருகின்றது. இதுபற்றியே மாதவச் சிவஞான யோகிகள்.
``இங்ஙனம் ஆசிரியர் மாட்டெறிந்ததூஉம்
உணராதார் ... ... ... ... சித்தாந்த வழக்கொடு
முரணிக் கூறுவர்``8
எனக் கூறினார்.
பஞ்சாக்கரத்தைத் தூலமாகக் கணித்தலை விடுத்துச் சூக்குமமாகக் கொண்டு கணிப்பினும் யகாரம் வகாரத்திற்கும், நகாரத்திற்கும் இடைப்பட்டே நிற்றலால் பாசம் நீங்காதது பற்றி,
``ஆசில் நவா நாப்பன் அடையாது, அருளினால்
வாசி யிடை நிற்கை வழக்கு`` * *திருவருட்பயன் 89.
என்றார் உமாபதி தேவர். அஞ்செழுத்தில் பாச எழுத்துக்களை நீக்கி உச்சரிக்கின், யகாரம் வகாரதிற்கும் சிகாரத்திற்கும் இடைப்பட்டு நிற்றலை மேற்கூறியவாற்றால் அறிக. இதனையறியாதார், `சிவாய சிவ` என்பதை ஓர் உருவாக வைத்துப் பல உருக்கள் கணிக்க வேண்டும் என்பர். அவ்வாறு கணிப்பின். சில உருக்களில் `சிவா` என்பது `வசி` என இயைந்து அவ்வுருக்கள் வாசியிடை நிற்றலாகிய சாதகத்தப் பயவாமை உணர்க.
சிவஞானபோத ஒன்பதாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட சகலத்தில் சுத்த சுழுத்தியில் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையே உச்சரித்தல் வேண்டும் எனக் கூறினமையால், `பத்தாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட `அவனே தானே ஆகிய. அந்நெறி - ஏகனாகி` ஆன்மாத் தன்னை யிழந்து நிற்பதாகிய சகலத்தில் சுத்த சுழுத்தியில் யகாரத்தையும் நீக்கி, `சிவ` என இரண்டெழுத்தாக உச்சரித்தல் வேண்டும்` என்பது போந்தது. `இது காரண பஞ்சாக்கரம்` எனப்படும். இதனை நாயனார் அடுத்து வரும் தந்திரத்தில் ``சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர்``, ``சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்`` என்பன முதலாக அருளிச் செய்வார்.
இங்ஙனமாகவே, சிவஞானபோதப் பதினொன்றாம் சூத்திரத்தில் அரன் கழலின்கீழ் ஆன்மா ஆனந்தத்தில் மூழ்குதலாகிய சகலத்தில் சுத்த துரியாதீதத்தில் அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்க. சிகாரம் ஒன்றுமே அசபா நலமாய் நிற்கும் என்பதும் பெறப்படும். இந்த ஓரெழுத்து மந்திரத்தை நாயனார் `நாயோட்டு மந்திரம்` என மறைபொருட்கூற்றாக ஓதினார். அந்தமந்திரத்தை மிகையானதாகப் பிற்காலத்தார் கருதிவிட்டனர். நாயின் தன்மை குரைப்பது. நாயின் தன் மையையே, `நாய்` என்றார். `குரைத்தலை ஓட்டுவது` என்றது, `பேச்சை ஒழித்து மௌனத்தை உண்டாக்குவது` என்றதாம். தருமை ஆதீன ஆதி பரமாசாரியராகிய குருஞான சம்பந்தரும்,
``கற்க இடர்ப்பட்டுமிகக் கற்றஎலாம் கற்றவர்பால்
தற்கமிட்டு நாய்போலச் சள்ளெனவோ``1
என, ஞான நெறியில் நில்லாது பேசும் பேச்சுக்களுக்கு நாயின் குரைப்பை உவமை கூறினார். `பேசா அனுபூதி`2 `மோனம் என்பது ஞானவரம்பு3 என்பன போன்றவற்றை நோக்குக. இந்த ஓரெழுத்து மந்திரம், `மாககாரண பஞ்சாக்கரம்` - எனப்படும். மந்திர நூல் வழக்கில், ஓர் எழுத்தான் ஆயதே சிறப்பாக `மந்திரம்` எனப்படும். அந்த மந்திரத்தை நாயனார் தமது மந்திர மாலையில் கூறாது போவாரோ.
ஐந்தெழுத்தாய் இருந்த மந்திரம் பின்பு மூன்றெழுத்தாய்ப் பின்பு இரண்டெழுத்தாய், இறுதியில் ஓரெழுத்தே ஆகிவிடுகின்றது. இது,
``சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே``4
என அருளிச் செய்த அனுபவத்திற்கு ஒத்துள்ளது. இதனை உமாபதி தேவர்,
``பதிபசு பாச முதிர்அறி வுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப், பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்,
ஈனமில் ஞாதுரு ஞானம் ஞேயம் என்று
இசைய மூன்றாய்ப் பசு பதி என்றவற்று
இரண்டாய், இரண்டும் ஒன்றின்ஒன் றாகத்
திரண்டாம் பயனெனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிவற் றியற்கை இயம்புதல் தகுமே``*
எனக் கூறினார். இங்ஙனம் கூறிய இதனையே சிவஞான யோகிகள் பரம சித்தாந்தத்தை ஓதியதாக உரைத்தார்.* இங்ஙனம் ஓதப்பட்டதன் பொருளை உணரமாட்டாதவர், பூர்வ பட்சம் எது? என அறிந்து கொள்ளாமல் இதற்கு உரை செய்துள்ளனர்.
இம்மந்திரத்தின் பொருள் இனிது விளங்குதற் பொருட்டு இத்துணையும் கூற வேண்டியதாயிற்று.
(உரை): தச காரியங்களில் முதல் மூன்றின் முடிவில் உள்ள தத்துவ சுத்தி எய்திய பொழுது அது நிலை பெறுதற் பொருட்டுத் திரு வைந்தெழுத்தில் பாச எழுத்தாகிய நமக்கனை நீக்கி - மூன்றெழுத்தாகக் கணித்து, அதனாலே முன்பு தத்துவங்களாகிய சடத்தோடு கூடிச் சடமாய் இருந்த நிலை நீங்கிச் சித்தாகிய ஆன்மாத் தானேயாகி யகாரத்தோடே நின்று, (அஃதாவது நமக்களோடு சேராது நின்று - ஆன்ம ரூபம். ஆன்ம தரிசனம் இரண்டும் இவ்விடத்தே நிகழ்ந்துவிடும் இவையெல்லாம் சகலத்தில் சுத்த சாக்கிரம் சுத்த சொப்பன சுத்த சுழுத்திகளாய்விடும்) பாசங்களினின்று மிக மேன்மை யுற்றுப் பின் இறுதியில் உள்ள அருட் சத்தி வழியாக, (இது சகலத்தில் சுத்த துரியம்.) இயல்பாகவே பாசம் அற்று இருக்கின்ற சிவனைப் பெறும் பேற்றை அடை (இது சகத்தில் சுத்த துரியாதீதம்) அப்பொழுது முன்பு இருந்த யகாரம் வகாரத்திலே அடங்கும். பின்பு வகாரமும் சிகாரத்திலே அடங்கிவிடும் அதன் பிறகு உனக்குக் கிடைப்பது பரானந்தந்தான். (இதற்குமேல்) அடையத்தக்கது எதுவும் இல்லை என்பதாம்.
Special Remark:
இதனைக் கீழ்க் காணும் பிற்காலத்து அடிகளது பாட்டு ஒன்று மிக நயம்படத் தெரிவிக்கின்றது.``மாயநட் டோரையும், மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட் டோட்டிவெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயை மறந்(து)
ஏயும் அதே நிட்டை யென்றான் எழிற்கச்சி ஏகம்பனே. ``
நட்டோர் - நண்பர். திரோதான சத்தியும். அதனால் கூட்டிச் செயற் படுத்தப்படுகின்ற மாயை கன்மங்களும். இவை நகாரத்தால் குறிக்கப் படுகின்றன.
மாயா - என்றுமே அழியாது நிற்கின்ற, மலம் - ஆணவம். ஆணவத்தை ஒரு பெண்ணாகக் கூறும் வழக்கு உண்மையை,
``பலரைப் புணர்ந்தும்இருட் பாவைக்குன் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு``3
என்னும் திருவருட் பயனாலும் அறிக. இம்மலம் மகாரத்தால் குறிக்கப்படுகின்றது.
வீயவிட்டு ஒட்டுதல், நகார மகாரங்களை நீக்குதல். மெய்யருளாம்தாய் வகாரம். அதனோடு கூடுதலாவது, முன்புபோல நகார மகாரங்களோடு கூடாது, வகாரத்தோடே இணைந்து நிற்றல்.
தாயுடன் செல்லுதல் யகாரத்தையும் நீக்கி, இரண்டெழுத்தாகக் கணித்தல்.
தாதையைக் கூடிப் பின் தாயை மறந்துவிடுதல், வகாரத்தையும் நீக்கிச் சிகாரத்தோடு மட்டும் இருந்துவிடுதல்.
`தானே` என்பது, முன்னிலைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதி. ஈறு ஆர் பரை - இறுதியில் உள்ள அருட் சத்தி, பரையின் - பரையினால், தற்பரன் பேறு - தற்பரனைப் பெறும் பேறு. நிலை மொழியின் ஈறுதிரியாமை சிறுபான்மை பொதுவிதியானே கொள்ளப் படும். பேறு ஆர், `பேற்றினைப் பொருந்து` என முன்னிலை ஏவல். `சிவாய அடங்கும்` `சிய்யில் வவ்வும் யவ்வும் அடங்கும்` எனக் கொள்க. `முத்தி` என்றது ஆனந்த நிலையை. ஏகாரம் தோற்றம்.
இவையெல்லாம் நின்மலாவத்தைக்கண் நிகழ்வனவே யாயினும், `பராவத்தையிலும் அதீதம் ஒழிந்த ஏனை நான்கிலும் சூக்குமமாய் நிகழும்` என்பது உணர்த்துதற்கு இங்கு இதனைக் கூறினார்.
இதனால், `அஞ்செழுத்தின்புணை` எல்லா அவத்தைகளிலும் ஏற்றபெற்றியில் பிறவிக் கடலைக் கடத்துதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage