ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய்
தன்னை யறியின் தயாபரன் எம்மிறை
முன்னை யறிவு முடிகின்ற ஞானமும்
என்னை யறியலுற் றின்புற்ற வாறே.

English Meaning:
End Ego-Awareness; Self is Realized;

Perform penances true
That your Future holds;
Know thyself,
And the merciful Lord
His Grace confers;
When my ego awareness ended,
Then I knew my Self;
And bliss am I.
Tamil Meaning:
சிறு தவங்களையெல்லாம் செய்து அலுத்துவிட்ட பின்பு நல்லறிவு பிறந்து செய்கின்ற பெருந்தவந்தின் வழியாக உயிர்களைப் பராவத்தையில் சேர்க்கின்ற தனது இயல்பை ஒருவன் அறிந்து தன்னை அடைய விரும்பினால் எங்கள் இறைவனாகிய சிவன் உடனே அவன் முன் தோன்றுவான். ஏனெனில் அவன் பெருங் கருணையாளன். அம்முறையில் யான் எனது பழைய சிற்றறிவு முடியும் காலத்தையும் அறிந்தேன் அதனால் சிவனது பேரறிவாலே என்னையும் அறிந்தேன். யான் இது பொழுது இன்புற்றிருக்குமாறு இவ்வாறாம்.
Special Remark:
பெருந்தவம், சரியை கிரியா யோகங்கள், இவற்றை பின்னையறிவனவாகக் கூறினமையால், முன்பு சிறு தவங்களைச் செய்தமை விளங்கிற்று. அவை உலகப் பயன்களை விரும்பிச் செய்தன வாகும். அப்பயன்கள் யாவும் சில காலமே யிருந்து அழிந்தொழிதலை உணர்ந்தமையால், அவற்றைத்தரும் தவங்களைச் செய்வதில் அலுப்பு உண்டாயிற்று. முன்மந்திரத்தில் சொல்லியபடி இப்பெருந்தவத்தால் சிவன் உயிர்களைப் பராவத்தையில் சேர்த்தல் பெறப்பட்டது. மோனை நயம் கெடுதலையும் நோக்காது, `உண்மை செய்து அன்னை அறியின்` எனப் பிரித்து, `சத்தி நிபோதம் வாய்க்கின்` எனப் பொருள் உரைப் பார்க்கு சத்தி நிபாதத்தின் பின்னர் நிகழ்வதாகிய பெருந்தவம் சத்தி நிபாதத்திற்கு முன் நிகழ்வதாய் முடிதலை நோக்குக. சிற்றறிவு - ஏக தேச ஞானம்; அஃதாவது சில பொருள்களையே அறிதல். அது முடியுங் காலம், அவ்வாறு அறிந்து வருதலில் உவர்ப்புத் தோன்றும் காலம். `தன்னாலே தந்தால் தன்னையும் தானே காணும்` என்பவாகலின், `என்னையறியலுற்று` என்றது சிவ ஞானத்தினால் ஆயிற்று. இவ்வாற்றால் பராவத்தையைத் தலைப் பட்டமையால் இன்புற்றிருக்க இயன்றது.
இதனால், முன் மந்திரத்தில், ``குறிப்பது கோல மடலது வாமே`` எனக் கூறிய அந்நெறியிலே நின்றவழி, முறையாக விளையும் பயன்களின் முடிநிலைப் பயனாகப் பராவத்தையும் அதன்கண் பரானந்தமும் உண்டாதல் கூறப்பட்டது.